கோட்டாபய ராஜபக்ஷவின் பொருளாதார வேலைத் திட்டத்தையே சஜித்தும் அனுரவும் அமுல்படுத்த தயாராகி வருகின்றனர்!

• 2022 இல் திட்டம் இல்லாமல் வரியைக் குறைத்ததால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது.

• உரம் வழங்கியது போன்று விவசாயிகளுக்கு நீரையும் வழங்கி விளைச்சலை அதிகரித்து தேசிய பொருளாதாரம் வலுப்படுத்துவோம்.

• கரும்பு விவசாயிகளுக்கும் உர மானியம் - ஜனாதிபதி மொனராகலையில் தெரிவிப்பு.

ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை - பிரசன்ன ரணதுங்க.

தவறான பொருளாதார தீர்மானங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்த எடுத்து சஜித்தும் அநுரவும் தயாராகி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி முறையான திட்டமின்றி முன்னெடுத்த வரிகளை குறைப்பு தீர்மானத்தால் 2022 இல் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை எவரும் மறந்துவிடக்கூடாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சஜித்தையும் அனுரவும் ஏன் போராட்டங்களை நடத்தி அவரை வீட்டுக்கு அனுப்பினார்கள் என்று  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.

கடந்த இரண்டு வருட காலத்தில் சிரமப்பட்டு முன்னெடுத்துச் சென்ற பொருளாதாரத்தை பாதுகாத்து, மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாட்டை உருவாக்கவே இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

மொனராகலையில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

"இன்று ஒரே கூட்டத்துக்காக கூடியிருக்கும் மக்கள் கடந்த காலங்களில் ஒவ்வொரு குழுக்களுக்கு ஆதரவளித்தனர். இன்று அனைவரும் ஒரு மேடையில் இருக்கின்றனர். இவர்கள் எவரும் கட்சி மாறவில்லை. ஆனால் 2022 ஆம் ஆண்டில் அனைவரும் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொண்டோம். எந்தவொரு கட்சியினருக்கும் அந்த கஷ்டங்கள் வெவ்வேறாக இருக்கவில்லை. அனைத்து கட்சியினரும் வரிசையில் அவதிபட்டனர்.அதனாலேயே இன்று அனைவரும் இந்த மேடையில் உள்ளனர்.  

சிலர் வருமானத்தை இழந்து தவித்தனர். நாம் நாட்டைக் காப்பாற்ற ஒற்றுமையாக பயணிக்க வேண்டியது அவசியமாகும். அதற்காகவே அரசாங்கமும் ஒற்றுமையாக பயணித்தது. நாட்டை மீட்பதற்காக நாங்கள் ஒன்றுபட்டோம்.

நெருக்கடி காலத்தில் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி 15 சதவீதமாக குறைந்து போனது. உற்பத்தியை அதிகரிக்க வேண்டியிருந்தது. கிரீஸ் இவ்வாறுதான் சரிவை கண்டது. இலங்கைக்கும் அந்த நிலை ஏற்பட இடமளிக்காமல் நான் அமெரிக்கா, உலக வங்கியுடன் பேசி உரத்தை பெற்றுக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் சிறுபோகத்துக்கு உரம் பெற்றுக்கொடுத்தோம். 2023 இல் பெரும்போகத்துக்கு உரம் கொடுத்தோம். 4 போகங்கள் சாத்தியமாக நடந்தன.

அதேபோல் பழங்கள், மறக்கறி விளைச்சலும் கிடைத்தது. அதன் பலனாக மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்தது. தொழிற்சாலைகள் முடங்கி கிடந்த வேளையில் விவசாயத்தை மேம்படுத்த முடிந்தது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையை பாதுகாக்கவே ஜனாதிபதி தேர்தலை நடத்துகிறோம். உரிய தீர்மானத்தை மக்கள் எடுக்க வேண்டும்.  

ஜே.வி.பி.யிடமோ ஐக்கிய மக்கள் சக்தியிடமோ நாட்டின் முன்றேற்றத்திற்கான திட்டம் இல்லை. அதனால் வாழ்க்கைச் செலவை குறைக்க வரியை குறைப்போம் என்கின்றனர். அப்படிச் செய்தால் அரசாங்க வருமானம் குறையும். அவ்வாறு செய்துவிட்டு பழைய நிலைக்கே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.

கோட்டாபய ஜனாதிபதியும் அதனையே செய்தார். சஜித்தும் அனுரவும் அதனையே செய்யப்போதாக சொல்கிறார்கள். அப்படியாயின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை விரட்டியடித்தது அர்த்தமற்றதாகிவிடும்.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டில் பொருளாதாரம் வலுவடைந்ததால் மக்களுக்கு ஓரளவு சலுகை வழங்கினோம். அதனால் அரச ஊழியர்களுக்கு 10 சம்பள அதிகரிப்பை இரண்டு கட்டங்களின் கீழ் வழங்கினோம். உதய செனவிரத்ன அறிக்கையின் பிரகாரம் அடுத்த ஆண்டிலும் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ளது.

நிதி இருப்பதால் அதனை செய்கிறோம். வறுமையான மக்களுக்கும் நாம் சலுகை வழங்குகிறோம். பொய் வாக்குறுதிகளை நான் ஒருபோதும் சொல்லமாட்டேன். நாட்டில் வளர்ச்சி ஏற்படும்போது சம்பளம் அதிகரிக்கும். பொருட்களின் விலையும் குறையும். 2025 - 2026 எவ்வாறு சலுகை கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். 2026 இறுதி காலாண்டில் சலுகைகள் அதிகளவில் கிடைக்கும்.

அரச ஊழியர்கள் பல நெருக்கடிக்கு முகம்கொடுத்தனர். இன்று ஓரளவு மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கிறது. 2022 - 2023 கஷ்டங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். இனி இளையோருக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குவோம். சுய தொழில் பயிற்சியை பெறவும் நிதிச் சலுகை வழங்குவோம். பொருளாதார மேம்பாட்டை உருவாக்கவும் வழி செய்வோம். இந்த அரசாங்கத்தில் தீர்க்க முடியாமல் போன பிரச்சினைகளுக்கு அடுத்த முறை விரைவில் தீர்வு தருவோம்.

குளங்களை மறுசீரமைத்து காணிகளைப் பகிர்ந்தளித்து நாம் விவசாயத்தை பலப்படுத்துவோம்.  உமா ஓயா வேலைத்திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. 5 வருடங்கள் இப்பகுதி மக்களுக்கு வசதிகளை தந்து அவகாசம் தருகிறேன். நீங்கள் விளைச்சலை அதிகரிக்க வேண்டும்.

நாட்டை முன்நோக்கி நகர்த்த செப்டெம்பர் 21 சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது தண்ணீரும் இருக்காது."

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,

"நாட்டில் பொருளாதார நெருக்கடியின் போது நிபந்தனையின்றி நாட்டை ஏற்பவருக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தோம். ஆனால் எதிர்கட்சித் தலைவர் சஜித் அதற்காக முன்வரவில்லை. அப்போதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்தோம். தனது திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் ஏற்றுக்கொள்வதாக சொன்னார். அவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பை சரியாக செய்து முடித்தார்.

கடந்த இரு வருடங்களில் மக்கள் கஷ்டங்களைப் போக்க அவர் செய்த அர்பணிப்புக்களை கண்டதாலேயே மீண்டும் ஒரு முறை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வந்தோம். அதனால் சிலர் ஐக்கிய தேசிய கட்சியில் நாம் இணைந்து கொண்டதாக போலி பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் நாட்டுக்கு தேவையான புதிய அரசியல் கலாச்சாரத்தைப் பின்பற்ற வேண்டும் என்பதாலேயே ஜனாதிபதியுடன் இருக்கிறோம்.

வாய்ச்; சொலில் வெட்டி வீழ்த்தும் தலைவர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால்  செயல் வீரராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளனர். ஜே.வி.பியின் வன்முறை வரலாறுகளை மக்கள் இன்றும் மறக்கவில்லை. 2022 இலிம் அனுரகுமாரவின் தலைமையில் அதை செய்ய முற்பட்டனர். அது நடக்கவில்லை. சஜித் பிரேமதாச இன்று சொன்னதை நாளை மறந்துவிடுவார். அவ்வாறான தலைவர்கள் இந்த நாட்டுக்கு தேவையா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்." என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்ஷா,

"நாடு அனுரவிற்கு என்று சொல்கிறார்கள்.  ஆனால் அவருக்கு வௌிநாடுதான் செல்ல வேண்டியிருக்கும். அனுரகுமார திசாநாயக்க கடந்த தேர்தல்களில் 3 சதவீத வாக்குளை மட்டுமே பெற்றுக்கொண்டார். மக்கள் கஷ்டபட்ட வேளையிலும் அவர் ஓடி மறைந்துகொண்டார்.

அன்று நாட்டில் தீக்குச்சு கூட இருக்கவில்லை. அதனால் துணிச்சலாக வந்து நாட்டை மீட்ட தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே உள்ளார். ஜே.வி.பியில் இன்று கம்யூனிசம் இல்லை. அவர்கள் பணம் அச்சிடப்படும் என்று சொல்கிறார்கள். அதனால் நாட்டு மக்களின் வாழ்க்கை சுமையே அதிகரிக்கும்.

அதனால் சிலிண்டருக்கு வாக்களித்தால் மட்டுமே மக்களுக்கு உணவு கிடைக்கும். இல்லாவிட்டால் கஞ்சிக்கும் வழியில்லாத ஒரு நாட்டையே மக்கள் காண வேண்டியிருக்கும்." என்றார்.

Read more