2022ஆம் ஆண்டு இந்த நாட்டில் வரிசையில் நிற்காத குடும்பத்தைக் கண்டுபிடிப்பது மிக கடினமான விடயம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், டைட்டானிக் கப்பலைப் போன்று மூழ்கிக் கொண்டிருந்த இந்நாட்டை தாம் பொறுப்பேற்று கப்பலிலுள்ள மக்களை அழைத்துக் கொண்டு சரியான பாதையில் பயணித்து வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கப்பலை துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று நாட்டை வெற்றிபெறச் செய்வதற்கு எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி மக்கள் ஆணையைக் கோருவதாகவும் குறிப்பிட்டார்.
காலி சமனல விளையாட்டரங்கில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
தாம் எப்போதும் நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும், தாம் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
''அன்று நாட்டு மக்கள் வரிசையில் நின்று அவதிப்பட்டனர். வரிசையில் நிற்காத ஒரு குடும்பத்தையாவது தேடுவது கடினமாக இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடவும் இந்த நாட்டை நான் பொறுப்பேற்றேன். அதன் கடைசி கட்டத்தை இப்போது முடித்துவிட்டேன். சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் எமக்கு கடன் வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை போன்ற நாட்டிற்கு ஏற்ற கடன் நிலைத்தன்மை தொடர்பில் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளேன்.
மேலும், 18 நாடுகள் எமக்கு கடன் வழங்கியிருந்தன. அந்த நாடுகளில் 17 நாடுகளுடனும், சீனாவுடனும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்றாவது குழுவான தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடன் நாளை உடன்பாடு எட்டப்படும். எனவே, அடிப்படைக் கடமைகளை நிறைவேற்றி நாட்டை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அகற்றும் நிலைக்கு கொண்டு வந்து விட்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன்.
ஆனால், இந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். புதிய பொருளாதாரத்தை உருவாக்காவிட்டால், மீண்டும் கடன் வாங்கி நம் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும். அந்த பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான ஆணையை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் வாழ்க்கை என்பது சவால்கள் நிறைந்த வாழ்க்கை. இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். டைட்டானிக் கப்பலைப் போல இந்த நாடு மூழ்கிக் கொண்டிருந்தது. கப்பல் முழுவதும் துளைகள் இருந்தன. கெப்டன்கள் யாரும் இல்லை. கப்பலில் இருந்த சிலரை இணைத்துக் கொண்டு நாட்டை முன்னேற்றினேன். எப்படியோ இப்போது கப்பலை சரியான திசையில் செலுத்திவிட்டோம். ஆனால் இதுவரை துறைமுகத்திற்கு கொண்டு வரப்படவில்லை. மக்கள் ஆணையுடன் செப்டம்பர் 21 ஆம் திகதி கப்பலை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்ல இருக்கிறேன்.
நான் எப்போதும் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே முடிவுகளை எடுத்தேன். கடினமான மற்றும் மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் ஸ்திரப்படுத்தி மக்களுக்கு நிவாரணம் வழங்கினோம்.
இன்று வெளிநாடுகளின் ஆதரவு எமக்குக் கிடைத்துள்ளது. இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய பொருளாதார கட்டமைப்பு அவசியம். இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும். எனவே நாம் பிச்சைக்காரர்களின் தேசமாக மாறுவோமா அல்லது நாட்டின் பெருமையை தொடர்ந்து பாதுகாப்போமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தேர்தல் முடிந்து இரண்டு வாரங்களில் இந்த நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எமது நாட்டிற்கு வருவார்கள். அந்த சமயம் வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுவிட்டு செய்தியை அவர்களுக்குக் கொடுக்கலாம். ஐ.எம்.எப் உடனான நிபந்தினையை மாற்றினால் நிவாரணம் கிடைப்பது ரத்தாகும். டொலரின் பெறுமதி 500 ரூபாவாக உயரும்.
ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியின் கீழ் பொருளாதாரம் வளர்ச்சியடைந்ததாக இன்று அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக் கொண்டுள்ளார். சிலவேளை எமது திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார். அப்படியானால் ஏன் நாட்டை அநுரவிடம் ஒப்படைக்க வேண்டும். நான் வேலைத் திட்டத்தை தொடரலாம். ஒன்றரை வருடங்களில் நாட்டை நிர்வகிக்க முடியாவிட்டால் ஒதுங்குவதாக அநுர குறிப்பிட்டுள்ளார். அவரால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பது இதன் ஊடாக ஊர்ஜிதமாகிறது. சஜித்தும் அநுரவும் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையை இன்னும் மோசமாக்குவார்கள்.
சஜித் பிரேமதாச தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் பங்கேற்கவில்லை.இவ்வாறு பயப்படும் தலைவர்களால் இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத தலைவர்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் அர்த்தமில்லை. எனவே, உங்கள் எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள். இந்த நாட்டை பழைய நிலைக்கு திரும்ப அனுமதிக்காதீர்கள். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன். இப்போது புதிய நாட்டை உருவாக்க முன்வருமாறு அனைவரையும் அழைக்கிறேன். அதற்கு கேஸ் சிலிண்டருக்கு செப்டம்பர் 21 ஆம் திகதி வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
''நாட்டின் பொருளாதாரம் தற்போது மீண்டு வருகிறது. நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா என மக்களிடம் கேட்கிறேன். மாற்றம் தேவை என்கிறார்கள். பங்களாதேஷத்தில் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்த பிரதமர் ஷேக் ஹசீனா துரத்தப்பட்டார். நாட்டை முன்னேற்றிய தலைவி போராளிகளால் விரட்டப்பட்டார். இன்று பங்கதேஷில் 19 மணி நேர மின்வெட்டு அமுலில் உள்ளது. இந்த நாட்டிற்கும் அப்படியொரு மாற்றம் தேவையா என்று கேட்கிறேன். எனவே இந்த தேர்தலில் சரியான முடிவை எடுங்கள். இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறது. மாற்றத்தை ஏற்படுத்திய பிறகு, உலகின் ஏனைய நாடுகள் இருந்த இடத்திலிருந்து கீழ் மட்டத்திற்கு சென்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது சேவை நாட்டுக்கு தேவை. ஜனாதிபதியினால் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தது. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.'' என்றார்.
''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி செப்டம்பர் 22ஆம் திகதி சூரியன் உதிப்பது போல் உறுதியானது. இந்த நாட்டின் தெற்கில் இருந்து பிறந்த தலைவர் என்ற வகையில், யுத்தத்திற்கு நிறைவு காண மஹிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டில் பொருளாதார யுத்தத்தை வெற்றிகொள்ள செயற்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் காலியில் மகப்பேற்று வைத்தியசாலையை ஆரம்பித்து வைந்தார். நீதிமன்ற வளாகத்தை திறக்க வந்தார். 200 ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு உபகரணங்களை வழங்கினார், பல்லுயிர் சூழல் பூங்காவை திறக்கவும் அவர் இங்கு வந்தார்.
''இந்த நாடு வீழ்ச்சியடைந்த போது தலைவர்கள் நாட்டை விட்டு ஓடிவிட்டனர். ஆனால் ரமேஷ் பத்திரன, பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட தலைவர்கள் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டனர். காலி மக்கள் சவால்களை விட்டு ஓடுபவர்கள் அல்ல. எரிந்து கொண்டிருந்த நாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்று ஸ்திரப்படுத்தியுள்ளார்.
சுதந்திரத்திற்குப் பிறகு நமது தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். எஸ். டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்க,விஜய குமாரதுங்க, ஆர்.பிரேமதாச உள்ளிட்ட தலைவர்கள் கொல்லப்படுகின்றனர். ஜே.ஆர்.ஜெயவர்தன மீதும் குண்டு வீசப்பட்டது.லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க ஆகியோர் கொல்லப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு நமது அரசியல் தலைவர்கள் 125 பேர் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை ஏற்று இலங்கையை தெற்காசியாவின் சிறந்த நாடாக மாற்றுவதை உலக வல்லரசுகள் விரும்பவில்லை. எனவே நாம் கவனமாக இருக்க வேண்டும். இம்முறை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அதிக வாக்குகளுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.'' என்றார்.
''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்வதற்காக காலி மக்கள் இன்று ஒன்றுபட்டு நிற்கின்றனர்.தொலைக்காட்சி விவாதங்களுக்கு சஜித் செல்வதற்குப் பயப்படுகிறார். ஏனென்றால் சவாலை ஏற்கும் திறன் சஜித்துக்கு இல்லை. நாடு நெருக்கடியை எதிர்கொண்ட போது சவாலை ஏற்க முடியாத ஜே.வி.பி இப்போது பரீட்சார்த்தமாக ஆட்சியைக் கோருகிறது. வேறு மாவட்டங்களில் இருந்தே அதன் கூட்டங்களுக்கு மக்கள் அழைத்து வரப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
சர்வமதத் தலைவர்கள், பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள, உள்ளுர் அரசியல் பிரதிநிதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர்.