அமரபுர பீடத்தின் நாயக்க தேரரை சந்தித்து ஜனாதிபதி ஆசி பெற்றார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வௌ்ளவத்தையிலுள்ள அமரபுர மகா பீடத்தின் தலைமையகத்திற்கு இன்று (28) முற்பகல் சென்றிருந்ததோடு, அங்கு அமரபுர மகா பீடத்தின் மகாநாயக்க வண.கரகொட உயன்கொட மைத்ரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டதோடு, இதன்போது பிரித் பாராயணம் செய்து மகா நாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.

அதனையடுத்து மகா சங்கத்தினருடன் கலந்துரையாடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போதைய அரசியல் மற்றும் சமூக, பொருளாதார நிலைமைகள் குறித்து அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

கடந்த இரண்டு வருடங்களில் பொருளாதார நெருக்கடியினால் அல்லல் பட்ட மக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை சாத்தியமாக செயற்படுத்திய தான், நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடிக்குள் விழாமல் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அதற்காக மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்தை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தனவும் இதன்போது கலந்துகொண்டார்.

Read more