சஜித்தினதோ அநுரவினதோ எதிர்காலத்தை அன்றி உங்களினதும் உங்கள் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை பற்றி சிந்தித்து எரிவாயு சிலிண்டருக்கு வாக்களியுங்கள்

• கடந்த பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுத்து மக்கள் படும் இன்னல்களைப் போக்க சஜித்தோ அல்லது அனுராவோ முன்வரவில்லை.

• நான் மக்களுக்காக எரிபொருள் மற்றும் உரம் கேட்கும் போது சஜித்தும் அனுரவும் தேர்தலைக் கோரினர்.

• கஷ்டப்பட்டு மீட்டெடுத்த  நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்போம்- ஜனாதிபதி கிளிநொச்சியில்  தெரிவிப்பு .

சஜித்தின் அல்லது அநுரவின் எதிர்காலத்தை அல்ல, தமது மற்றும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து இந்த நாட்டு மக்கள் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்காக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (10) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அண்மைய பொருளாதார வீழ்ச்சியை அடுத்து மக்கள் படும் துன்பத்தைப் போக்க சஜித்தோ அல்லது அனுரவோ முன்வரவில்லை.

உலகெங்கிலும் உள்ள அரச தலைவர்களை சந்தித்து உரம், எரிபொருள் கேட்ட போது சஜித்துக்கும் அநுரவுக்கும் தேர்தல் நடத்துமாறு கோரியதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, மக்களின் வலிக்கு மத்தியில் தேர்தல் நடத்துமாறு கோரியும் வேலைநிறுத்தம் நடத்தியும் நாட்டை சீர்குலைக்க முயன்ற தலைவர்களை நம்ப முடியாது எனவும் தெரிவித்தார்.  

எனவே சிரமப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி நகர்த்தி அபிவிருத்தியடைந்த நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் கைகோர்க்க வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

"இரண்டு வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு சாப்பிட உணவிருக்கவில்லை. கேஸ்.எரிபொருள், மருந்து, உரம் இருக்கவில்லை. பொருளாதாரம் சரிவடைந்திருந்தது. அப்படியொரு தருணத்திலேயே நாட்டை ஏற்றேன். மக்கள் கஷ்டப்படுவதை கண்டு வருந்தினேன்.

கஷ்டங்களில் இருந்து மீண்டு மக்கள் சுமூகமாக வாழ வழி செய்ய வேண்டுமென கருதியே ஆட்சியை ஏற்றுக்கொண்டேன். அனுரவோ சஜித்தோ அரசாங்கத்தை ஏற்க முன்வரவில்லை. மக்களின் வயிற்றுப்பசியை போக்கவோ, தட்டுப்பாடுகளை நிவர்த்திக்கவோ, பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்தவோ அவர்கள் முன்வரவில்லை.

மக்கள் கஷ்டப்படுவதை வேடிக்கை பார்த்தனர். கஷ்டத்தை போக்க உதவி செய்ய வருமாறு கோரினேன். அதையும் மறுத்திவிட்டனர். மக்கள் தட்டுப்பாடுகளுடன் தவித்தபோது அவர்களுக்கு தேர்தல் தேவைப்பட்டது. தேர்தல் நடத்தியிருந்தால் மக்கள் பிரச்சினைகள் தீர்ந்திருக்குமா? அவர்கள் தேர்தலுக்கு பணத்தை செலவிட சொன்னார்கள். அவர்களை என்னோடு இணையுமாறு அழைத்தேன் வரவில்லை. மக்கள் கஷ்டத்தில் அரசியல் இலாபம் தேடினார்கள்.

நான் தட்டுப்பாடுகளை நிவர்த்திக்க வழி செய்தேன். அதனால் தொழில்களை மீள ஆரம்பிக்க முடிந்தது. எந்த பிரச்சினைகள் இருந்தாலும் மக்களை வாழவைக்கும் முயற்சிகளை எடுத்தோம். அன்று பொருட்களின் விலை அதிகரித்திருந்தது. நான் ரூபாவை பலப்படுத்தி விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்கினேன்.

நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆனால் பிரச்சினைகள் இன்னும் உள்ளன. மக்களுக்கு சுமைகள் உள்ளன. அவற்றை குறைக்க வழி செய்வோம். இன்று சுமூகமான சூழலை உருவாக்கியிருக்கிறோம். ஐஎம்எப் மற்றும் 18 நாடுகளின் கடன் உதவிகள் கிடைக்கவுள்ளன. அதனை முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். அடுத்த ஐந்து வருடங்களில் அதற்கு வழி செய்வேன். அதற்காகவே மக்கள் ஆணை கேட்கிறேன்.

பொருளாதாரத்தை நிலைப்படுத்தியிருந்தாலும். அது முழுமையாக உறுதியாகவில்லை. அதற்காகவே இயலும் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை கொண்டு வந்திருக்கிறேன். ஐந்து அம்சங்களை உள்ளடக்கி அந்த திட்டத்தை தயாரித்திருக்கிறோம்.

ரூபாவை வலுவடையச் செய்வதே மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான சிறந்த வழியாகும். மக்கள் தாங்கிக்கொள்ள கூடிய அளவு பொருட்களின் விலையை குறைக்கலாம். பணம் அச்சிட்டால் அது நடக்காது. அதிகளவில் கடன் பெற்றாலும் அதே நிலையே ஏற்படும். நாம் கடன் பெறுவதை நிறுத்தியுள்ளோம்.

அதனால்தான் வருமானத்தை மேம்படுத்த வற் வரியை அதிகரித்து ரூபாயை பலப்படுத்தினோம். இப்போது வௌிநாட்டு வருமானத்தை ஈட்ட வேண்டியுள்ளது. இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு பணம் இல்லாமையால் கடன் பெற வேண்டியுள்ளது. எனவே ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

நவீன விவசாய முறைமைகளுக்குச் செல்ல மக்களுக்கு உதவிகளை வழங்குவோம். மரக்கறி மற்றும் பழங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விநியோகிக்க தனியாருடன் இணைந்து சந்தைப்படுத்தல் திட்டங்களை அறிமுகப்படுத்துவோம்.

நெல் விளைச்சலையும் பலப்படுத்துவோம். உலக சனத்தொகை அதிகரித்து வரும் வேளையில் உணவு உற்பத்தியை அதிகப்படுத்தி நாமும் வலுடைய வேண்டும். இதனால் கிராமங்களில் வறுமை மறையும். இந்த பகுதிகளை இலங்கையின் மிகச்சிறந்த விவசாய மையமாக மாற்றுவோம். எமக்கு உதவ மக்கள் முன்வர வேண்டும்.  

அதற்காகவே பலாலி சர்வதேச விமான நிலையை மேம்படுத்தினோம். பரந்தன், காங்கேசன்துறை, மாங்குளத்தில் முதலீட்டு வலயங்களை அமைப்போம். சூரிய சக்தி மூலம் மின்சார உற்பத்தி செய்வோம். இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யவும் முடியும். அதனால் பலருடைய வாழ்க்கை செழிப்படையும். டிஜிட்டல் பொருளாதார உருவாக்கப்படும். கிளிநொச்சி பொறியியல் பீடத்தை சுற்றிலும் அமைந்துள்ள பகுதிகளை மேம்படு்த்துவோம்.

என்னுடைய எதிர்காலத்தைப் பற்றியோ சஜித்துடையதோ அனுரவுடையதோ எதிர்காலத்தை பற்றியோ சிந்திக்காமல் தத்தமது எதிர்காலத்தையும் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் சிந்தித்து  தீர்மானியுங்கள்.

அதைப்பற்றி சிந்தித்து சிலிண்டருக்கு வாக்களியுங்கள். தவறினால் சிலிண்டரும் இருக்காது. எதிர்காலமும் இருக்காது." என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஈபிடிபி தலைவர்,அமைச்சர் டக்லஸ் தேவானந்தா:

"கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நாம் தவறவிடும் பட்சத்தில்  அடுத்த ஐந்து வருடங்கள் அதனை நிவர்த்தி செய்வதற்காக காத்திருக்க வேண்டும்.  இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான முடிவை எடுக்க வேண்டும்.   உண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரு வருட வளர்ச்சியை தொடர்ச்சியாக கொண்டு செல்ல முடியும். இன்றேல் அதளபாதாளத்தில் நாடு வீழும்.அதனை உணர்ந்து ரணில் விக்ரமசிங்கவை தெரிவு செய்ய வேண்டும். எங்களை நம்பி உங்கள் வாக்குகளை அளியுங்கள். கட்சி என்ற ரீதியில் அதற்கு நாம் பொறுப்பாக இருப்போம்.

நமது அரசியல் தலைமைகள் தென்னிலங்கை  ஆட்சியாளர்களுடன் உறவை வைத்துக் கொண்டு தமது சுயலாபங்களை பெற்ற பின்னர் அரசாங்கம் ஏமாற்றிவிட்டது என்று மக்களை பலர் ஏமாற்றுவார்கள் நாம் அவ்வாறு  ஒருபோதும் சொல்ல விரும்பவில்லை. நாம் சொல்வதைத் தான் செய்வோம். ஜனாதிபதியின் மீது நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்:

"இன்று மக்களை பலரும் தவறாக திசைதிருப்பிவிட முயற்சிக்கிறார்கள். காணி உறுதிகள் அற்ற மக்களுக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினாலேயே தீர்வு வழங்க முடியும். சஜித் பிரேமதாச அறைகுறையான வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்து மக்களை நடுத் தெருவில் விட்டுள்ளார்.

மறுமுனையில் அனுரகுமார திசாநாயக்க பற்றி இளையோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த கட்சியின் வரலாறு என்னவென்பது மக்களுக்குத் தெரியும். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மட்டுமே ர வவுனியா, மன்னார் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும்.

அனுரவையோ சஜித்தையோ மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் எதிர்காலம் கேள்விக்குரியாகிவிடும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வே கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க வழி செய்தார்.

அன்று அரசாங்கத்தை  ஒப்படைத்த போது  ஏற்காதவர்கள்  வீட்டின் நிர்மாணம் முழுமையாக கட்டிய பின்னர் வந்து குடியமரலாம் என்று நினைக்கிறார்கள்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பற்றி பல பொய்களை சொன்னாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடைமுறை சாத்தியமான விடயங்களை மட்டுமே செய்வார்." என்றும்  தெரிவித்தார்.

ஈபிடிபி தலைவர்கள்,அமைப்பாளர்கள்,முக்கியஸ்தர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Read more