நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

• நாட்டிற்காக ஒன்றுபட்டால் அதற்கு கூச்சல் போடும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை.

• ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி பயணிப்பதாக அநுர திஸாநாயக்க கூறுகையில் இறக்குமதி பொருளாதாரத்தை முன்னெடுக்க வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்: முரண்பாடான கருத்துக்கள் குறித்து நாட்டுக்கு தெளிவுபடுத்துமாறு  அநுரவிற்கு ஜனாதிபதி அழைப்பு.

• மாற்றத்தை ஏற்படுத்துவதாக கூறும் அநுரவின் 232 பக்க விஞ்ஞாபனம் “வெற்று மாற்றம்” ஆகும்.

• நாட்டிற்குத் தேவையான அரசியல், பொருளாதார, சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரே வேலைத்திட்டம் "இயலும் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டமாகும் - மொரவக்கவில் ஜனாதிபதி தெரிவிப்பு.

டி.எஸ். சேனநாயக்கவும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காக  ஸ்தாபித்த  ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காக அனைவரையும் ஒன்றிணைத்து மீண்டும் பங்காற்ற ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டிற்காக ஒன்றுபடுகையில் கோசமிடும் ஐ.ம.ச யுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தத்  தொடர்புமில்லை என்று  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஜீ.எல். பீரிஸ்,நாலக கொடஹேவா மற்றும் டலஸ் அழகப்பெரும போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில்  ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை எதுவுமில்லை எனவும் குறிப்பிட்டார்.

மொரவக்க பிரதேசத்தில் இன்று (06) நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசாங்கம் தற்பொழுது முன்னெடுக்கும் ஏற்றுமதி பொருளாதாரத்தை தாமும் முன்னெடுப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கையில் இறக்குமதி பொருளாதாரத்தை மேற்கொள்ள வேண்டும் என சுனில் ஹந்துன்நெத்தி  கூறுகிறார். இந்த முரண்பாடான கருத்துக்களை தேசிய மக்கள் சக்தி நாட்டுக்கு விளக்கமளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று கூறி தேசிய மக்கள் சக்தி நாட்டை ஏமாற்றிய போதிலும், அவர்களின்  232 பக்க விஞ்ஞாபனத்தில்  மாற்றம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அது வெற்று மாற்றம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இன்று எனக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் முக்கியமான நாள். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சுதந்திரத்திற்காக ஒன்றுபட்டனர். பின்னர் பிரிந்து செயற்பட்டனர். அதேபோல் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்து வந்திருக்கும் வேளையில் நாம் ஒன்றுபட்டிருக்கிறோம்.

இன்று சிலர் கட்சியை விட்டு ஓடிவிட்டு நாங்கள் ஒன்றிணைந்திருப்பதைப்  பற்றி பேசுகிறார்கள். நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வேளையில் நாட்டை மீட்பதே ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையாகும். ஐக்கிய மக்கள் சக்திக்கும் தேசிய கட்சிக்கும்  இடையில் எந்த தொடர்பும் இல்லை. ஜீஎல்.பீரிஸ்,நாளக கொடஹேவா, டலஸ் அலகப்பெரும போன்றவர்களை பலப்படுத்தும் கட்சியினரை  எவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் என்று சொல்லிக்கொள்ள முடியும்.

ஐக்கிய தேசிய கட்சி என்ற வகையில் கட்சியின் முன்னாள் தலைவர்களும் நாமும் உண்மையை மட்டுமே மக்களுக்கு சொல்வோம். கடந்த தேர்தல் காலத்திலும் நான் இந்த நாடு வங்குரோத்து அடையப்போகிறது என்ற உண்மையை முன்கூட்டியே மக்களுக்குச் சொன்னேன். நாடு நெருக்கடியிலிருந்து மீள  600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என்பதையும் சொன்னேன்.  எம்மிடம் திட்டம் ஒன்றுமில்லை என்று எதிர்த்தரப்பினர் அன்று விமர்ச்சித்தனர். அதனால் நாம் தோற்றுப்போனோம்.

அப்போது சிலர் உண்மை கூறி தோற்பதற்கு பதிலாக பொய் சொல்லி வென்றிருக்கலாம் என்று கூறினார்கள். ஆனால் எமது கொள்கையில் மாற்றமில்லை. எவ்வாறாயினும் நாம் அன்று கூறியவாறு நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தேவையான நிதியை தேடிக்கொண்டிருக்கிறோம். ஐஎம்எப் மற்றும் கடன் வழங்கிய 18 நாடுகளின் உதவியுடன் 16 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேடிக்கொண்டுள்ளோம்.

தற்போது ஐஎம்எப் எமக்கு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதனால் மக்களுக்கு சேவை செய்வதற்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது. அதற்காகவே விருப்பம் இல்லாமலேனும் வற் வரியை அதிகரித்தோம். அதனை செய்ததாலேயே நாட்டில் பணவீக்கம் குறைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்து. அதன் பலனாக பொருளாதாரம் நிலைதன்மையை அடைந்தது. இன்று முன்னோக்கி செல்கிறோம்.

அதேபோல் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். நிவாரணம் பெறும் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். சமூர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் இன்று கிடைக்கிறது. பின்னர் உறுமய திட்டத்தில் காணி உறுதிகயை வழங்குகிறோம். அரச ஊழியர்களுக்கு சம்பளம், வாழ்வாதார கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டது. அடுத்த வருடத்திற்கான சம்பள அதிகரிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உரத் தட்டுபாட்டையும் போக்கினோம்.

அதனால் பல பொருட்களின் விலைகள்  குறைந்தன. சில பொருட்களின் விலைகள் 10  சதவீதத்தினால்  குறைந்துள்ளதோடு சில பொருட்களின் விலகள் 40  சதவீதம் வரையில்   குறைந்தன. எவ்வாறாயினும் இன்னும் ஐந்து வருடங்களுக்கு சரியான பாதையில் பொருளாதாரத்தை கொண்டுச் செல்வதற்கான திட்டத்தை முன்மொழிந்திருக்கிறோம்.  

ஐந்து அம்சங்களின் கீழ் அந்த திட்டத்தை செயற்படுத்தவிருக்கிறோம். இன்று ரூபாவின் பெறுமதி குறைந்துள்ளது. ஆனால் அது போதுமானதல்ல. இருப்பினும் நாட்டில் நிலைத்தன்மை உருவாகியுள்ளது. வாழ்வாதாரச் செலவும் குறைந்துள்ளது. இன்னும் பல நிவாரணம் மக்களுக்கு கிடைக்கும். எதிர்கட்சிகள் வரி குறைப்பு பற்றி பேசுகின்றனர். அதே வழியில் சென்றதாலேயே கோட்டாபய ஆட்சி சரிந்தது. நாம் செல்லும் வேகம் குறைவாக இருக்கலாம் .ஆனால் எமது பயணம் வலுவான பயணமாக இருக்கும்.

இன்று கஷ்டங்களுக்கு மத்தியிலாவது வாழக்கூடிய நிலைமை உள்ளது. அதேபோல் இந்நாட்டு  பெண்களின் உரிமைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பெண்களுக்கு தனியானதொரு பகுதியை தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கிறோம். பெண்களை வலுவூட்டும் சட்டத்தையும் நிறைவேற்றியுள்ளோம். அதனால் பெண்களின் உரிமைகள் எல்லா இடங்களிலும் பாதுகாக்கப்படும்.

பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுப்பதற்கான திட்டங்களையும் குறிப்பிட்டுள்ளோம்.  சுய தொழில் செய்வோருக்கும் நிதி நிவாரணங்களை வழங்குவோம். தனியார் துறையிலும் அரச துறையிலும் பயிற்சி பெறுவதற்கும் நிதி உதவிகளை வழங்குவோம்.

சஜித்துக்கோ அனுரவிற்கோ இந்த திட்டங்கள் இல்லை. தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. விவசாய நவீன மயப்படுத்தல் முயற்சிகளை ஆரம்பிக்கவுள்ளோம். உலக உணவுத் தேவையை இலக்கு வைத்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள வழிகாட்டுவோம்.

தேயிலை வளர்ப்பு, தேயிலை மீள் வளர்ப்புக்கான நிதி உதவிகளும் வழங்குவோம். கருவா, கோப்பி போன்ற உற்பத்திக்கும் புதிய ஏற்றுமதிக்கான பொருட்களை விளைவிக்கும் அனைவருக்கும் சலுகை வழங்குவோம். அடுத்த வருடத்திலிருந்து நிவாரணங்கள் கிடைக்கும். மேலும் சுற்றுலா பயணிகள் வருகையை அதிகரிக்க பலப்படுத்தவும் அர்ப்பணிக்கவும் வேண்டும்.

டிஜிட்டல் பொருளாதாரம், முதலீட்டு வலயங்கள் என்பவற்றை உருவாக்குவோம். அதனால் வௌிநாட்டு முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவோம். இவ்வாறிருக்க என்று அநுரகுமார திசாநாயக்கவும் ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி பேசுகிறார். எமது கொள்கையை அவரும் பின்பற்றுவதை வரவேற்கிறோம்.

ஆனால் மறுமுனையில் நான் பொருளாதார பரிமாற்றச் சட்டமூலத்தை சமர்பிக்கும்போது சுனில் ஹந்துநெத்தி  போன்றவர்கள் அதற்கு எதிராக வழக்கு தொடுத்தனர்.  அதனால் அனுரகுமார சொல்லும் விடயங்களுக்கு முரனாணதாகவே ஹந்துனெத்தியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. அதேபோல் உள்நாட்டு வௌிநாட்டு முதலீட்டாளர்களை புறக்கணிக்கும் வகையிலான கொள்கைகளை குறிப்பிட்டுள்ளனர். அது பற்றி நாட்டு மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும். இன்று திசைக்காட்டி எந்தப் பக்கம் சுற்றுகிறது என்பது அவர்களுக்கு புரியவில்லை.

இன்று நாட்டில் மாற்றம் செய்ய போவதாக கூறுகிறார்கள். ஆனால் அதற்கான எந்த விடயங்களும் அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இல்லை. ஆனால் நாம் பல்வேறு மாற்றங்களை செயலில் காட்டியிருக்கிறோம். ஜனசபா, இளையோர் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் உள்ளிட்ட  பல மாற்றங்களை செய்தோம். ஊழல் எதிர்ப்புக்கான தெற்காசியாவின் வலுவான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம்.  

அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நாம் செய்து காட்டுகிறோம். எனவே அநுரகுமார திசாநாயக்க எமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். இயலும் ஸ்ரீ லங்கா நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டம். நெருக்கடியின் போது முடியாது என்று ஓடியவர்களோ இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே சிலிண்டர் சின்னத்துக்கு வாக்களியுங்கள்." என்று மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார:

அஸ்வெசும தொடர்ந்து தேவையா?பிள்ளைகளுக்கு ஜனாதிபதி புலமைப்பரிசில் தொர்ந்து கிடைக்க வேண்டுமா? தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டங்களை தொடர வேண்டுமா?அவ்வாறானால் கேஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இன்றேல் பங்களாதேஷத்து பிள்ளைகளின் முகங்களை நினைவில் கொள்ளுங்கள்.  

இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ்:

எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்படுவதோடு பெருந்தோட்ட மக்களின் வாழ்வில் விடிவு காலம் ஏற்படும். எமது பிரதேசங்களிலும் கஷ்டப்படும் மக்கள் உள்ளனர். காலி,மாத்தறை மாவட்டங்களிலும் தோட்ட மக்கள் வாழ்கின்றனர். வீட்டுப் பிரச்சினை, காணிப்பிரச்சினை .சம்பளப் பிரச்சினைகள் இன்னும் இருக்கிறது. ஆனால் செய்நன்றி மறக்க முடியாது. சில தலைவர்கள் தோட்ட மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். தோட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டனர், தோட்ட மக்களின் சம்பளப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றார்கள். எமது அடையாள அட்டைகைள் பறிக்கப்பட்டன. பஸ்கள் எரிக்கப்பட்டன. இந்த அழிவுகளை ஜே.வி.பி செய்திருக்காவிட்டால் இந்த நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

எந்த நாளும் குறைபாடுகளை பேசிக் கொண்டிருக்கலாம். ஆனால் பிரச்சினைகளை தீர்ப்பது யார்? தோட்ட மக்கள் , சிங்கள மக்களுடன் இணைந்த வாழ்வதோடு அவர்கள் நாட்டின் மீது அன்பு செலுத்துகின்றனர்.  கேஸ்சிலிண்டருக்கு வாக்களித்தால் கேஸ்சிலிண்டர் வீட்டுக்கு வரும்.இன்றேல் கேஸ்சிலிண்டர் பெற வீதிக்கு வர நேரிடும்.தாய்நாட்டின் மீது உண்மையான அன்பிருந்தால் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்போம்" என்றார்.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர:

எமக்குக் கிடைக்கும் தகவல்களின் படி அரச உத்தியோகஸ்தர்களின் பெரும்பான்மையானவர்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 191  மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி  சபை உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் மாத்தறை மாவட்டத்தில் பொதுஜன பெரமுன196  உள்ளுராட்சி சபை உறுப்பினர்களே  உள்ளனர். பொதுஜன பெரமுனவில் 8  மாகாண சபை உறுப்பினர்கள் இருந்தனர்.அவர்களினல்  90 வீதமான  உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் ,ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர்.

சவால்களை ஏற்காது ஓடியவர்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்தால் எம்மை காப்பாற்றுவார்கள் என்று நம்ப முடியுமா?

ஐமச பல துண்டுகளாக உடைந்துள்ளன. கண்டியில் ஒரு கொள்கையை வெளியிடுகிறார்கள். கொழும்பில் வோறொன்றை வெளியிடுகிறார்கள்" என்றார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க:

இரவில் விழுந்த குழியில் பகலிலும் விழப் போகிறோமா, அல்லது ரணில் விக்ரமசிங்கவுடன் நாட்டை கட்டியெழுப்பப் போகிறோமா, அனைவரும் இருந்த சரியான முடிவை எடுப்போம்.  தெனியாயவின் அபிவிருத்தி பல சேவைகளை ஜனாதிபதி கடந்த காலத்தில் மேற்கொண்டார். மேலும் குறைபாடுகள் உள்ளன. எமது ஆஸ்பத்திரியை முன்னேற்ற வேண்டும்.

அமைச்சர் மஹிந்த அமரவீர:

புலிகளும் ஜே.வி.பியும் செய்த அழிவுகள் இன்றேல் கடன் சுமையின்றி கடன் வழங்கும் நாடாக இலங்கைக்கு மாறியிருக்கலாம். கடன் வழங்கும் நிலைக்கு எமக்கு முன்னேறியிருக்கலாம்.  அழிவு செய்தவர்கள் நாம் நாட்டை அழித்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். வாக்குகளின் ஊடாக மக்களுக்கு எவரையும் தெரிவு செய்யலாம். ஆனால் நாட்டை மீட்கும் தலைவரே இன்று எமக்குத்  தேவை.

வயல்களை அரசு சுவீகரிப்பதாக டளசும் புத்திகவும் தெரிவித்துள்ளனர். அதனை நிறுத்துவதாக சஜித் எழுத்து மூலம்அறிவித்துள்ளார். அரசுக்குச் சொந்தமான காணிகளை மக்களுக்கு வழங்கி வரும் அவர் ஒருபோதும் காணிகளை சுவீகரிக்க மாட்டார்.

விவசாயிகளுக்கு 4000 ரூபா குறைத்த வழங்க பசளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்தார்.

Read more