'இயலும் ஸ்ரீலங்கா' வேலைத் திட்டத்தின் மூலம் 2025 - 2026 ஆம் ஆண்டாகும்போது நாட்டின் பொருளாதாரம் வழமைக்கு கொண்டு வரப்படும்

• அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று கூறும் சஜித் நாட்டின் பொருளாதாரத்தை கேலி செய்தார்.

• கஷ்டப்பட்டுக் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவே அநுர முயற்சிக்கிறார்.

• கடைத் தெருவில் கதைப்பது போல் கதைக்காமல் தனது பொருளாதார திட்டத்தை நாட்டுக்கு முன்வைக்க வேண்டும் - கம்பளையில் ஜனாதிபதி தெரிவிப்பு.

'இயலும் ஸ்ரீலங்கா' வேலைத் திட்டம் 2025 - 2026 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வரும்  என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அனைத்தையும் இலவசமாக தருவதாக கூறும் சஜித் நாட்டின் பொருளாதாரத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அனுர திஸாநாயக்க அழிக்க திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கம்பளையில் இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

இந்த மக்கள் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், தான் ராஜபக்ஷாக்களைப் பாதுகாப்பதாக சஜித்தும் அனுரவும் குற்றம் சுமத்தினாலும்,   தாம் ஜனாதிபதியின் பொறுப்பை ஏற்றுக்கொண்டது மக்களைப் பாதுகாப்பதற்காகவே அன்றி, ராஜபக்ஷவைப் பாதுகாப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்தார்.

அந்தப் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றிய தான், நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில்  கோருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டம் 'இயலும்  ஸ்ரீலங்கா' வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டதாவது:

''கம்பளையில் நான் கண்ட மிகப் பெரிய மக்கள் கூட்டம் இது தான். நாம் வெல்வது உறுதி. உங்களுக்கு பெற்றோல், டீசல், மருந்து வழங்கவும், உணவு வழங்கவும் நாட்டைக் கட்டியெழுப்பவும் தான் நான் நாட்டைப் பொறுப்பேற்றேன். 2 வருடங்கள் முன்னெடுத்த திட்டத்தால் கஷ்டத்துடனேனும் அனைவரும் வாழக் கூடியதாக உள்ளது. சஜித்தும் அநுரவும் மக்களை தனிமைப்படுத்திவிட்டு ஓடினார்கள்.

என்னை ரணில் - ராஷபக்‌ஷ என்கின்றனர். ராஜபக்ஷவினரைப் பாதுகாப்பதாக சொன்னார்கள். நான் மக்களைப் பாதுகாப்பதற்குத்தான் வந்தேன். ராஜபக்ஷவினரை நான் பாதூகாத்திருந்தால் அவர்கள் எனது மேடையில் இருந்திருக்க வேண்டும். மக்களை வாழ வைக்க ஒத்துழைக்குமாறு கோரியபோது  தேர்தல் வேண்டும் என்றனர். எமக்கு ஒத்துழைப்பு வழங்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் தான்  இன்று நாட்டைக் கோருகின்றனர். அவர்களை துரத்தியடிக்க வேண்டும். நாம் பொறுப்பேற்ற போது நாட்டிற்கு எதிர்காலம் இருக்கவில்லை. மக்கள் கடன் பட்டிருந்தனர், நகைகளை ஈடுவைத்தனர். வரியை விதித்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்தக் கஷ்டங்களை நான் அறிவேன். வாழ்க்கைச் செலவு ஓரளவு குறைந்துள்ளது. அதனை இன்னும் குறைக்க வேண்டும். மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளன.

எம்மால் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். வரிச்சுமையை குறைக்கவும் நிவாரணங்கள் வழங்கவும் எம்மால் முடியும். இவற்றை நாம் இணைந்து  மேற்கொள்வோம்.

2025-26 ஆம் ஆண்டாகும் போது சுமூக நிலையை ஏற்படுத்துவேன். அதற்கான வாய்ப்பை எனக்குத் தாருங்கள். அடுத்த வருடம் முதல் தொழில்வாய்ப்பு, விவாசாய நவீனமயமாக்கல், அஸ்வெசும, உறுமய திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். லயன் அறைகளை கிராமங்களாக்கி அந்த காணி உரிமையையும் தோட்ட மக்களுக்கு வழங்க இருக்கிறோம்.

சஜித் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாக சொல்கிறார். அவரின் பொருளாதாரம் பற்றி பேசிப் பயனில்லை. திசைகாட்டியின் விஞ்ஞாபனத்தில் உள்ளது போன்று நான் ஜனாதிபதியானால் 'வளமான நாடு : அழகான வாழ்க்கை' உருவாகும். அதிலுள்ளவாறு வரவு செலவுத் திட்டம் தயாரித்தால் 400 முதல் 425 ரூபாவாக டொலர் உயரும்.

எமக்கு செலவு 6,800 பில்லியனாக உள்ளதோடு 5100 பில்லியனாக வருமானம் காணப்படுகிறது. இதனை நிவர்த்தி செய்ய சந்தையில் இருந்து 5 வீத வட்டிக்குக் குறைவாகப் பணம் பெற இருக்கிறோம். அதன் ஊடாக வரவு செலவுத்திட்ட குறைபாடு தீரும். திசைகாட்டியிலுள்ளவற்றை நிறைவேற்ற 8900 பில்லியன் அவசியம்.  வரி குறைத்தால் 4900 பில்லியன் வருமானம் குறையும். மொதத் தேசிய உற்பத்தியில் 12 வீதமாக துண்டுவிழும் தொகை இருக்கும். அதாவது 4000 பில்லியன் குறைவாக இருக்கும். பணம் அச்சிட்டால் வெளிநாட்டு உதவி கிடைக்காது. இந்த நிலையில் டொலரின் பெறுமதி 500 டொலர்களாகும். நான் தவறு எனின் தமது புள்ளிவிபரங்களை வௌியிடுங்கள்.

பொருளாதார திட்டம் எதுவும் அநுரவிடம் கிடையாது. கோட்டாபய காலத்தை விட மோசமான நெருக்கடி நிலையை முன்னாள் விவசாய அமைச்சர் ஏற்படுத்துவார். எனவே புத்திசாலித்தனமாக சிந்தித்து முடிவெடுங்கள்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே:

''சஜித்தின் கண்டிக் கூட்டத்தில் கூட்டம் சேரவில்லை. வரவலாற்றில் ஒரு நாளும் இது போன்ற மேடையையும், கூட்டத்தையும் கண்டிருக்காது. இந்த மேடையில் அனைத்து கட்சிகளும் உள்ளன. 69 இலட்சம் வாக்குகளில் 90 வீதமானோர் ரணில் விக்ரமசிங்கவுடன் தான் உள்ளனர். கண்டி மாவட்ட 220 உள்ளுராட்சி சபை உறுப்பினர்களில் 202 பேர் எம்முடன் உள்ளனர். கண்டி தமிழ் மக்கள் தொண்டமான், வேலுகுமார், மஹிந்தானந்த மற்றும் அநுராதாவுக்குத்தான் வாக்களித்தனர். அவர்கள் இங்குள்ளனர். வடக்கிலுள்ள மக்கள் ரணில் விக்ரமசிங்கவுடனே உள்ளனர். ஜே.வி.பி என்றவுடன் பஸ் எரித்ததும் நகைகளை பறித்ததும் தான் நினைவு வரும். தலைவர் உயர் தரத்தான ஆடைகள் அணிகிறார். ஆனால் மற்றவர்கள் கிழிந்த ஆடை அணிவதாக சொல்கிறார்கள். திசைகாட்டி 66 இலட்சம் மேலதிக வாக்குகள் பெற்றால் தான் வெல்லலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 8 இலட்சம் வாக்குளைப் பெற வேண்டும். வேறு காலத்தை விட சற்று அதிக வாக்குளை அந்தக் கட்சி பெறும்.  வாக்குச் சீட்டில் கீழே இருந்து மூன்றாவது இடத்தைப் பார்த்தால் கேஸ் சிலிண்டர் இருக்கும். அதற்கு வாக்களிப்போம்.'' என்றார்.

இராஜாங்க அமைச்சர் அநுராத ஜெயரத்ன:

''கட்சி பேதமின்றி அனைவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துள்ளனர். 2022 இல் வழங்கிய பிரதமர் பதவியை ஏற்காத சஜித் 21 ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டின் பொறுப்புக்களை ஏற்பாரா? ரணில் விக்ரமசிங்கவிடம் தோற்பேன் என்று தெரிந்து கொண்டு தான் சஜித் போட்டியிடுகிறார். சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவாவார். நீங்கள் வரிசையில் இருக்கும் போது உங்கள் பொறுப்பை ஏற்க சஜித் முன்வந்தாரா? நீங்கள் கஷ்டப்படும் போது முன்வராதவர்களை எப்படி நம்பப் போகிறீர்கள். அநுர வந்தால் நாடு இருண்ட யுகத்திற்கே செல்லும்.'' என்றார்.

முன்னாள் அமைச்சர் தலதா அதுகோரள்ள‌:

''ஜனாதிபதியை ரணில் ராஜபக்‌ஷ என்று சிலர் விமர்சிக்கின்றனர். இது குறித்து கவலைப்படுகிறேன். உங்களுக்கு சாப்பாடு வழங்கவும், மருந்து பெற்றுக் கொடுக்கவும், நாடு நெருக்கடியில் இருந்தபோது தீர்வு வழங்கவும் செயற்பட்டதால் தான் அவரை இவ்வாறு விமர்சிக்கின்றனர். உங்களின் பட்டினியை உணராதவர்கள் எப்படி நாட்டின் பொறுப்பை ஏற்று உங்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள். எமது நாட்டிலுள்ள அனுபவம் நிறைந்த தலைவர், உங்களின் பிரச்சினைகளை உணர்ந்த தலைவர் ரணில் ஒருவர் தான். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம். மீண்டும் தவறு செய்து விடாதீர்கள். ஏமாந்து விடாதீர்கள். அனுபவம் அற்றவர்கள் மற்றும் தோற்றவர்கள் ஆட்சியைக் கோருகிறார்கள். 50 வீத பணிகளை ஜனாதிபதி செய்துள்ளார். எஞ்சியதை நிறைவு செய்ய அவரை வெற்றிபெறச் செய்வோம்.'' என்றார்.

அமைச்சர் ஜீவன் தொண்டமான்:

''சிலர் ரணிலுக்கு கூட்டம் சேர்க்க முடியாது என்றனர். இங்கு ஒரு படையே திரண்டுள்ளது. அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த விடயம் தொடர்பில் தோட்ட மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்க உள்ளது. சம்பள பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்க உள்ளது. நாடு முக்கிய தருணத்தில் உள்ளது. ஜ,தே.க வேட்பாளராகவோ இ.தொ.க, பொதுஜன பெரமுன வேட்பாளராக அவர் களமிறங்கவில்லை. அவர்கள் மக்களின் வேட்பாளராக இறங்கியுள்ளார். இ.தொ.க எப்பொழுதும் சரியான பக்கம், வெற்றியின் பக்கம் தான் இருந்தது. முஸ்லிங்களுக்கு பாரிய துரோகம் இழைக்கப்பட்டது. எமது அமைச்சினால் அறிக்கை ஒன்றைத் தயாரித்து முஸ்லிங்களிடம் மன்னிப்புக் கோரினோம். நடந்தது தவறு என்ற அங்கீகாரத்தைக் கொடுத்தோம். முஸ்லிங்களுக்கு அநீதி இழைத்த அனைவரையும் சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்பது எமது கடமையாகும்.

மலையக மக்களுக்கான வீட்டுப் பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். 2 வருடத்திற்கு முன்னர் வீட்டிற்கான செலவு 950,000 ரூபாவில் இருந்து 32 இலட்சம் வரை அதிகரித்துள்ளது.  இந்த வீட்டுத் திட்டம் நடக்காது என அனைவரும் நினைத்தார்கள். என்பக்கம் நீங்கள் நில்லுங்கள் மக்கள் பக்கம் நாம் நின்கிறேன் என அவர் சொன்னதைச் செய்துள்ளார். நாமும் ஒருகாலத்தில் அவருக்கு எதிராக செயற்பட்டிருக்கிறோம்.  21 ஆம் திகதி அனைவரும் இணைந்து ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வோம். கட்சிக்கான ஜனாதிபதியன்றி இலங்கை மக்களுக்கான ஜனாதிபதியை நாம் தெரிவு செய்ய வேண்டும். எதிர்காலத்திற்காக வாக்களியுங்கள். வேண்டும் ரணில். மீண்டும் ரணில்" என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார்:

''பொருளாதார நெருக்கடியின் போது, ​​எந்த தலைவரும் ஜனாதிபதி பதவியை ஏற்க விரும்பவில்லை. இன்று அந்தத் தலைவர்கள் வாக்குறுதி அரசியலை முன்னெடுத்து மக்களுக்கு கனவுகளை விற்கின்றனர். ஆனால் பொருளாதாரத்தை நிர்வகித்து நாட்டை மீட்டெடுத்த தலைவர் யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.  அடுத்த ஐந்து வருடங்களிலும் இலங்கையில் இந்த ஆட்சி தொடர வேண்டும்.. மீண்டும் வீழ்ச்சியடையாத பொருளாதாரத்தை உருவாக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே" என்றார்.

அந்த வெற்றிப் பேரணிக் கூட்டத்தில் மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

Read more