எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அனைத்து மீனவர்களுக்கும் உடனடி இழப்பீடு

• மொரட்டுவை தச்சர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்.

• துறைமுக வசதிகளை மேம்படுத்த எதிர்காலத்தில் விரிவான திட்டம்.

• தற்போதைய வேலைத் திட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - மொரட்டுவ மக்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் கடல் மாசுபட்டதில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்கனவே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டுகள் உடனடியாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (08) இரவு மொரட்டுவ வில்லோரவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே,  அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் தச்சர்களுக்கு ஓய்வூதியம் வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி, முறைசாரா தொழில் சந்தையில் பணியாற்றும் அனைவருக்காகவும்  ஆரம்பிக்கப்படும் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம் குறித்து 'இயலும் ஸ்ரீலங்கா'  வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இங்கு முன்வைக்கப்பட்ட துறைமுக வசதிகளை மேம்படுத்துவதற்கான பிரேரணை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இந்தியாவுடன் கலந்துரையாடி வருவதாகவும் ஹம்பாந்தோட்டை மற்றும் கொழும்பு துறைமுகங்களும் அபிவிருத்தி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.

சீனாவின் சோங்கிங்கிற்கு பயணிப்பதற்காக  மியன்மாரில் நிர்மாணிக்கப்படும் புதிய துறைமுகத்துடன் வங்காள விரிகுடா பிராந்தியத்தை இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதன்மூலம்  இந்து சமுத்திரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு  ஆகிய இரண்டு பிராந்தியங்களையும் கப்பல் போக்குவரத்துக்காக அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க :

‘’போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த போதைப்பொருள் தடுப்புக் கட்டளை மையத்தை நிறுவ எதிர்பார்ப்பதுடன், போதைப்பொருள் பற்றிய ஆய்வு, போதைப்பொருளைக் கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு தண்டனை பெற்றுள்ளவர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்த நிறுவனத்தின் மூலம்  மேற்கொள்ள  எதிர்பார்க்கின்றோம்.  மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தற்போதுள்ள சட்டங்களை விட கடுமையான சட்டங்களை அமுல்படுத்தவும்  எதிர்பார்க்கிறோம்.

எமது பொருளாதாரத்திற்கு  தற்போதைய கடன் சுமையைத் தாங்க முடியாது எனவும், பொருளாதாரம் வீழ்ச்சியடையும் எனவும் நான் இந்த நாட்டை பொறுப்பேற்ற போது சர்வதேச நாணய நிதியம் அறிவித்திருந்தது. எம்மால் கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கடன் நிலைபேற்றுத்தன்மை இழந்தது. அதன்படி, கடனைச் செலுத்துவதற்கு கடன் நிலைபேற்றுத் தன்மையை நிறுவ வேண்டியிருந்தது. கடன் பெறுவதையும் பணம் அச்சிடுவதையும் நிறுத்த வேண்டி ஏற்பட்டது. அரச வங்கிகளில் கடன் பெற வேண்டாம் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்த வங்கிகளுக்கு நிதி மூலதனத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. இந்த நிலையைக் கருத்திற் கொண்டு அரச  வருமானத்தை அதிகரிக்க VAT வரியை உயர்த்த வேண்டியிருந்தது.

இது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் அது பலன் தரும் என்று எங்களுக்குத் தெரியும். வற் வரியை அதிகரித்து, வருமான வரி முறையையும் மாற்றினோம். இதன் பிரதிபலன்கள் தற்போது கிடைத்துள்ளன. அதற்கேற்ப, நாட்டின் வருமானம் அதிகரித்தபோது,ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றது. 370 ரூபாவாக இருந்த டொலர் 300 ரூபாவை எட்டியது. இதனால் பொருட்களின் விலைகள், பெற்றோல்,  டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை படிப்படியாகக் கணிசமாகக் குறையத் தொடங்கியது.

ஆனால் ஒரு பிரச்சினை இருந்தது. 2019 இல், டொலர் 185 முதல் 190 ரூபா வரை இருந்தது. அதற்கேற்ப பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. டொலர் மதிப்பு 370 ரூபாவாக உயர்ந்தபோது, அதற்கேற்ப பொருட்களின் விலையும் உயர்ந்தது. ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. வரி விதிப்பால், வருமானம் மேலும் குறைந்தது. எனவே, மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தோம். முதலில், குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக ‘அஸ்வெசும’ திட்டத்தை செயல்படுத்தினோம்.

பயனாளிகளின் எண்ணிக்கை 24 இலட்சமாக உயர்த்தப்பட்டது. 2024 இல் வருமானம் அதிகரிக்கும் போது அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நாங்கள் பணியாற்றினோம். 2024 பட்ஜெட்டில் 10,000 வழங்கப்பட்டது. வரும் ஆண்டில் இருந்து உதய ஆர். செனவிரத்ன குழுவின் அறிக்கை அமுல்படுத்தப்படுகிறது. எனவே, 2025-2026 காலகட்டத்தில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரண்டும் அதிகரிக்கும். எனவே, இப்பணியை தொடர்வதா, வேண்டாமா என்பதை இந்த தேர்தலில் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவதே எங்கள் நோக்கம். அரசும் தனியார் துறையும் இணைந்து 100,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறோம். வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும் 50,000 பேருக்கு பயிற்சிக்கான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏற்றுமதிப் பொருளாதாரத்தில் எமது மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்தல், எதிர்வரும் வருடத்தில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல், விவசாய நவீனமயமாக்கல், புதிய முதலீட்டு வலயங்களை உருவாக்குதல், டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குதல் ஆகிய அனைத்தும் ‘இயலும் ஸ்ரீலங்கா’ திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வங்குரோத்தான ஒரு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர ஏனைய நாடுகளுக்கு பத்து - பதினைந்து வருடங்கள் ஆனது. ஆனால் 2027இற்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஏனைய வேட்பாளர்களால் இந்த நடவடிக்கைகளை செய்ய முடியுமா என்ற கேள்வி உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு கொள்கை பிரகடனங்களைக் கொண்டுள்ளது. நாலக கொடஹேவாவின் "செமட ஜயக்" விஞ்ஞாபனமும் மற்றைய குழுவின் Blue Print 3.0 அறிக்கையும் உள்ளன.

எமது நாட்டு வர்த்தகர்கள் ஏற்றுமதி பொருளாதாரத்தில் கவனம் செலுத்தி எமது உற்பத்திகளை இந்தியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என எனது நண்பர் தேசிய மக்கள் கட்சியின் அனுரகுமார திஸாநாயக்க அண்மையில் கூறியிருந்தார். அதனால் அவர்கள் எங்கள் திட்டத்தை பின்பற்றுவது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் இலங்கை இதுவரை செய்து கொண்ட அனைத்து சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்று அவர்களின் விஞ்ஞாபனம் கூறுகிறது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லாமல் ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது எப்படி?

அத்துடன், இந்த நாட்டை ஏற்றுமதி பொருளாதாரமாக மாற்றும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு எதிராக சுனில் ஹந்துன்நெத்தி நீதிமன்றம் சென்றார். ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது அரசியலமைப்புக்கு எதிரானது என்றார். இறக்குமதி கைத்தொழில் அடிப்படையிலான பொருளாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொறவக்க பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றின் போது, இது குறித்து அவரிடம் வினவினேன்.  அதற்கு அவர் பதில் சொல்லவில்லை. மத்திய வங்கி மோசடி குறித்து பதில் தகவல் சொல்கிறேன் என்றார். அது பொருத்தமானதல்ல.

யாழ்ப்பாணத்திலும் இது பற்றி பேசியிருந்தார். ஏற்றுமதி பொருளாதாரம் பற்றி கேள்வி கேட்டால் மத்திய வங்கி மோசடி குறித்து பேசுகிறார்கள். அதற்காக இன்று நடைபெற்ற இளையோருடனான சந்திப்பொன்றிலும் என்தைத் திட்டித் தீர்த்திருந்தார். ஆனால் தேசிய ஒற்றுமைக்கு தயார் என்று அவர் கூறியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. ஆனால் நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதில்லை.

தேர்தல் காலங்களில் மற்றைய கட்சிகளிடம் கேள்விகள் கேட்கப்படுவது வழமை. அந்த கேள்விகள் சில சமயங்களில் விவாதம் வரையில் சென்றுள்ளன. பிணைமுறி மோசடி தொடர்பில் தேடிப்பார்க்க பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றும், ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. நானும் அதில் தொடர்புபட்டிருப்பதாக சொல்லப்பட்டதால் ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியிருக்கிறேன். இறுதியில் நான் அதில் தொடர்புபடவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

அதனுடன் தொடர்புபட்டவர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழங்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பின்னர் அரசாங்கம் இந்த வழக்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றது.  அங்கும் வழக்கு நிராகரிக்கப்பட்டது. தற்போதும் அரசாங்கத்தினால் வழக்கு உயர் நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

தேவைப்படும் பட்சத்தில் அனுரகுமார திசாநாயக்கவின் சட்டத்தரணியும் உயர்நீதிமன்றத்திற்குச் செல்ல முடியும். நடந்த உண்மை என்னவென்று அவர்களுக்கு புரியவில்லை. இந்நாட்டில் மோசடியை ஒழிக்க எம்மால் முடியும் அதற்கான சட்டத்தையும் நாமே நிறைவேற்றினோம்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த,

''இரண்டு வருடங்கள், மூன்று மாதங்கள் என்ற குறுகிய காலத்தில் இலங்கை இந்த நிலைமையை அடைந்திருப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே காரணமாவார். ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் அணிகளை தெரிவு செய்ய வேண்டியதில்லை. பாராளுமன்ற தேர்தலில் அதனைச் செய்யலாம். 2022 மே 09  இந்நாட்டு 88/89 களில் இருந்த காலத்தை நினைவூட்டுவதால் மக்கள் இன்றும் அமைதியாக இருக்கின்றனர். அந்த விம்பத்தை மறைக்கவே JVP இன்று NPP என்ற பெயரில் வருகிறது.  பெயரில் NPP என்றாலும் அதற்கு மறைந்திருப்பது அகோரமான JVP என்பது மக்களுக்கு  தெரியும்.’’ என்றார்.

மொறடுவ முன்னாள் மேயர் சமன் லால் பெர்னாண்டோ,

‘’ஜே.வீ.பி.க்கு வாக்களிப்பது எவ்வித வேலைத்திட்டமும் இல்லாத கட்சிக்கு வாக்களிப்பதாக அமையும். இன்று IMF பற்றி சஜித் போன்றவர்கள் பேசினாலும் உரிய நேரத்தில் IMF உடன் பேசிய ஒரே நபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் என்பதை மறக்கக் கூடாது.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் தான் இன்று தேர்தல் நடத்தக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்கியுள்ளது. அதனால் உண்மையைச் சொல்லும் தலைவர் வேண்டுமா பொய்களை சொல்லும் தலைவர்கள் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.’’ என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கொழும்பு முன்னாள் மேயர் ரோசி சேனநாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Read more