ஜனாதிபதிக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையே சந்திப்பு

• கொரோனா தொற்றின் போது மரணித்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ய பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறலை ஆராய பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்படும்.

• இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது - ஜனாதிபதி.

கடந்த கொரோனா வைரஸ் பரவலின் போது  மரணித்த முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தினரின் உடல்களை தகனம் செய்வதற்கு அரசாங்கத்திற்கு பரிந்துரைத்த தரப்பினரின் பொறுப்புக்கூறல் தொடர்பில் ஆராய்வதற்காக ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா நிறைவேற்றுக் குழுவுடன் நேற்று (27) மாலை நடைபெற்ற சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்மியதுல் உலமா தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதி, அதன் தலைவர் அஷ்-ஷெய்க் எம். ஐ. எம். றிஸ்வி   மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.  

உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷேக் அக்ரம் நூராமித், பொருளாளர் அஷ்-ஷேக்   ஏ. ஏ. அஹமட் அஸ்வர், உப தலைவர் அஷ்-ஷெய்க் எச். ஒமர்தீன், அஷ்-ஷெய்க் எம். ஜே. அப்துல் காலிக், உப தலைவர் அஷ்-ஷேக் ஐ. எல். எம். ஹாஷிம், உப தலைவர் அஷ்-ஷேக் ஏ. எல். எம். பலீல் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழு  உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். இதன் போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு மௌலவிமார் தமது ஆசிகளை தெரிவித்தனர்.

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மௌலவிமார்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆணையை கோருவதற்காகவே இந்த  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்ததன் பின்னர் மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய மதத் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் பலஸ்தீன மோதல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பலஸ்தீன நாடு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், அதற்காக தான் தொடர்ந்தும் குரல்கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம், ஜெருசலத்தில் புதிய கொன்சூலர் அலுவலகம் ஒன்றை திறந்திருப்பதாக பரவும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும், இஸ்ரேலுக்குள் பணியாற்றும் இலங்கையருக்கு சேவை வழங்குவதற்காக 2000 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலுக்குள் தூதரக சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி எம்.பி, பைசர் முஸ்தபா, முன்னாள் ஆளுநர் அசாத் சாலி உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Read more