சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்!

• கடந்த இரண்டு ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைச் சுமை குறைக்கப்பட்டுள்ளது.

• 2026 ஆம் ஆண்டாகும் போது மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம் உருவாக்கப்படும்.

• மக்களை வாழ வைப்பது என்பது அடிப்படை உரிமை மீறல் அல்ல : எதிர்காலத்திலும் மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார் - மட்டக்களப்பு, கல்லடி மக்கள் பேரணியில்  ஜனாதிபதி தெரிவிப்பு.

மக்களுக்கு நிவாரணம் வழங்கி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத் திட்டத்தை எதிர்கட்சியினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் 2026 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்குவோம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, மக்களை வாழ வைப்பது அடிப்படை உரிமை மீறல் அல்ல என்றும், எதிர்காலத்திலும் மக்களுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் என்றும் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் இன்று (24) முற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டதுடன் ஜனாதிபதிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த மேடையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ரோயல் கல்லூரியில் கற்பித்த ஆசிரியர் சிவலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.

"எந்தவொரு கோழைத்தனமான செயல்பாடுகளாலும், நம்முடன் துன்பப்படும் மற்றவர்களைக் கைவிட்டுவிட்டு,  ஓடிப்போய் எங்கள் நகரத்திற்கு நாம் ஆபத்தை ஏற்படுத்த மாட்டோம்" என்று எதென்ஸ் பேரரசின் இளைஞர்களின் சத்தியத்தின் அடிப்படையில் தனது ஆசிரியர் வழங்கிய அறிவுரையை இதன்போது நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தனது ஆசிரியரிடமிருந்து தாம் கற்ற பாடத்தின் காரணமாக 2022 ஆம் ஆண்டில் நாட்டைப் பொறுப்பேற்று, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான சவாலை தன்னால் வென்றெடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க:

"இந்த மேடையில் எனக்கு ரோயல் கல்லூரியில் கற்பித்த சிவலிங்கம் ஆசிரியர் இருக்கிறார். 13 - 14  வயதில் அவரிடம் கல்வி கற்றேன். 1961 ஆம் ஆண்டுகளில் நானும் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் அவரிடம் கற்றிருக்கிறோம். எனவே நாட்டை மீட்டெடுத்த பெருமையை அவருக்கும் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.

முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவும் மலிக் சமரவிக்ரமவும் சிவலிங்கம் ஆசிரியரிடம் கல்வி கற்றுள்ளனர். எதென்ஸ் சாம்ராஜ்ஜியத்தில் இளையோரின் எழுச்சி குறித்து ஆசிரியர் எங்களுக்கு கற்பித்தது நினைவிருக்கிறது. அச்சமடைந்த நாட்டுக்குள் மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையில் செயற்படக்கூடாது என்பதை வலியுறுத்தினார். அதனால் தான் 2022 ஆம் ஆண்டில் சவால் மிக்க தருணத்தில் எவரும் ஏற்காத நாட்டை நான் பொறுப்பேற்றேன்.

உங்களுக்காக போராடவும், உங்களுக்கு சலுகை வழங்கவும், அடுத்த தலைமுறைக்கு நல்ல எதிர்காலத்தை வழங்கவும், நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், நாட்டுக்குள் நிலைபேற்றுத்தன்மையை ஏற்படுத்தவும், நாட்டை சரியான பாதைக்கு கொண்டுச் செல்லவும் என்னால் தலைமைத்துவம் வழங்க முடிந்தது என்பதாலேயே 'இயலும் ஸ்ரீலங்கா' என்று சொல்கிறோம்.

கஷ்டமான காலத்தில் இந்த பொறுப்புக்களை நான் ஏற்றுக்கொண்டேன். எதிர்க் கட்சித் தலைவருக்கு இந்த ஆசான் கிடைக்கவில்லை. அதனால் தான் சவால்களை ஏற்காமல் அவர் ஓடிவிட்டார். பெரிஸ் ஒலிம்பிக் வரையில் அவர் ஓடி முடித்தார். எதிர்க்கட்சித் தலைவர் மாற்றுப் பிரதமர் ஆவார். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவரையும் சார்ந்துள்ளது.

ஆனால் மக்கள் கஷ்டப்படும் போது ஓடி மறைந்து கொண்டார். வரிசைகள் பற்றி யோசிக்கவில்லை, மக்கள் பசியை பற்றி சிந்திக்கவில்லை. அனுர குமாரவும் ஓடி மறைந்து கொண்டார். ஆனால் அன்று இங்கு இருக்கும் அமைச்சர்கள் இருந்தனர். நாம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடினோம். கஷ்டமான பல தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. உள்நாட்டு கடன் பெறுதல் வரையறுக்கப்பட்டது. பணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. செலவுகளைக் குறைத்து எதிர்கால நடவடிக்கைகளுக்கு வருமானம் தேட வெட் (VAT) வரியை அதிகரித்தோம்.

அவை இலகுவான பணியல்ல. அமைச்சரவையில் பல முறை பேசினோம். மக்கள் கஷ்டங்களை தாங்கிக்கொண்டமைக்கு நன்றி தெரிவிக்கிறோம். 2022 ஆம் ஆண்டில் மொத்தத் தேசிய உற்பத்தி 13 டொலர் பில்லியன் சரிவைக் கண்டது. எவ்வாறாயினும் எமது முயற்சிகளால் 2023 இல் 8 பில்லியன் டொலர்களினால் மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்தோம். இதனால் ரூபாயின் பெறுமதி அதிகரித்தது. அஸ்வெசும நலன்புரித் தொகை வழங்கினோம். இவ்வருடத்தில் 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கவுள்ளோம். சிறுநீரக நோயாளர்கள் மற்றும் வயோதிபர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டது.

11 பில்லியன் ரூபா செலவில் இலவசமாக அரிசி வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அடுத்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு உதய செனவிரத்ன அறிக்கையின்படி 25 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை வழங்குவோம்.  அதனால் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 55 ஆயிரமாக அதிகரிக்கும். ஓய்வூதியம் பெறுவோருக்கும் 3000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டது.  முதியோருக்கான நிலையான வைப்பு வட்டி வீதம் 10 ஆக அதிகரிக்கப்படும். மக்களுக்கு இலவச காணி உறுதிகளை வழங்குகிறோம். 20 இலட்சம் பேர் இதனால் பயனடைவர். அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டு உரிமைகளை மக்களுக்கு கொடுப்போம். பெருந்தோட்டங்கள் கிராமங்களாக மாற்றப்படும். 'உறுமய' வேலைத் திட்டத்திற்கு தனியான ஒரு ஆணைக்குழு அமைக்கப்படும். அதனால் அடுத்த மூன்று வருடங்களில் அந்த வேலைத்திட்டம் முழுமைப்படுத்தப்படும்.  

2 வருடங்களில் எந்த அரசாங்கமும் செய்ய முடியாததை செய்தோம். அதுவே முன்னேற்றம். 2022 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் சிவப்புப் பருப்பு விலை 41 ரூபாவினால் குறைந்துள்ளது. கோதுமை மா 29  ரூபாவினால் குறைந்துள்ளது. கோழி இறைச்சி விலை 11 சதவீதத்தினால் குறைந்திருக்கிறது. டீசல் 28 வீதமாக குறைந்துள்ளது. கேஸ் 31 சதவீதமாக குறைந்துள்ளது. டீசல்  450 ரூபாவில் இருந்து  318  ரூபாவாகக் குறைந்திருக்கிறது. குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 இல் இருந்து  28 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமை குறைந்துள்ளது. அதனாலேயே சிலிண்டர் சின்னத்தை தெரிவு செய்தேன்.

ஆனால் மேலும் பல சலுகைகள் தேவைப்படுகின்றன. அதற்காக ரூபாவை வலுப்படுத்த வேண்டும். 2025 ஆம் ஆண்டில் அதனை செய்து அதிக சலுகைகளை வழங்குவோம். இன்னும் ஒரு வருடம் பாடுபட்டால் நல்ல பலன்களை அடையலாம். பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்யலாம். மருந்து தட்டுப்பாட்டை குறைக்கலாம். பொருளாதாரம் மேம்படும். ஏற்றுமதித் துறை பலப்படும். சுற்றுலாத் துறை மேம்படும். வெருகல் - மட்டக்களப்பு வரையில் சுற்றுலா அபிவிருத்தி செய்யப்படும். சிறிய - பெரிய ஹோட்டல்கள் அமைக்கப்படும். கல்முனை - அருகம்பே வரையில் சுற்றுலாத்துறை பலப்படுத்தப்படும். இதனால் மக்களுக்கும் பல வாய்ப்புகள் உருவாகும்.

விவசாயம் நவீனமயப்படுத்தப்படும், மீன்பிடித்துறையும் நவீனமயப்படுத்தப்படும், வீடுகளின் வருமானம் அதிகரிக்கும், கல்குடாவை அபிவிருத்தி செய்வோம். அதனால் நாம் கடன் பெற்ற 18 தரப்பினருடன் வங்குரோத்து நிலையிலிருந்து மீள்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளோம். கடன் மீளச் செலுத்த காலம் வழங்கியுள்ளனர். 10 பில்லியன் டொலர் கடன் சலுகை கிடைத்துள்ளது.

சஜித் இந்த முறையை மாற்றப் போவதாக சொல்கிறார். இவற்றை மாற்றினால் சலுகைகள் நிறுத்தப்படும். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும். 400 ரூபா வரையில் டொலரின் பெறுமதி அதிகரிக்கும். கேஸ் இருக்காது. நாட்டை வழி நடத்தும் முறை சஜித்துக்கு தெரியாது. நாம் அதற்கான முயற்சிகளை செய்த போாதும் எமக்கு உதவ முன்வரவில்லை. உங்களுக்கு சலுகைகளை வழங்க முயற்சித்தோம். அதற்கிடையில் தேர்தல் நடத்தவில்லை என்று எனக்கெதிராக வழக்குத்  தொடுத்தனர். தேர்தல் நடத்தியிருந்தால் அதற்கே 3 - 4 மாதங்களை செலவிட வேண்டியிருந்திருக்கும்.

2022 ஒவ்வொரு நொடியும் நாம் பாடுபட்டதாலேயே இன்றைய நிலை எட்டப்பட்டிருக்கிறது. எந்த ஒரு நாடும் இவ்வளவு சீக்கிரம் மீண்டு வந்ததில்லை. அதனைத் தடுப்பதே எதிர்க் கட்சியின் தேவையாகும். எனக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை பெற்றுள்ளனர். மக்களை வாழவைப்பது அடிப்படை உரிமை மீறல் என்று நான் நினைக்கவில்லை. மக்களுக்காக முன்வந்து கஷ்டப்பட நான் தயார். அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதே எனது தேவையாகும்.

எனவே தேர்தலில் அவர்களை துடைத்தெறியுங்கள். நாம் ஒற்றுமையாக முன்னேறுவோம் .நாட்டையும் முன்னேற்றுவோம். சிறந்ததொரு எதிர்காலத்தை நான் உருவாக்குவேன். 2019 ஆம் ஆண்டில்  இருந்ததை விடவும் நல்ல நிலையை உருவாக்குவேன். எதிர்காலத்தைப் பாதுகாக்க முன்வாருங்கள். செப்டெம்பர் 21 ஆம் திகதி சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டர் இன்றி அல்லல்பட நேரிடும்." என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அமைச்சர் பந்துல குணவர்தன:

இந்தப் பிரதேசத்தில் 75 வீத மேலதிக வாக்குகளினால்   ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவார். ஐ.தே.க, மக்கள் ஐக்கிய முன்னணி, பொதுஜன பெரமுன உட்பட  அனைத்து கட்சிகளையும் இணைத்த பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க மாத்திரம் தான் போட்டியிடுகிறார். பிள்ளையானின் கட்சி,அதாவுல்லாவின் கட்சி உட்பட சிறுபான்மை கட்சிகள் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குகின்றன. ரணில் விக்ரமசிங்கவை வெல்ல வைப்பதற்காக அன்றி, தாய் நாட்டை மீள கட்டியெழுப்பும் திட்டத்தை வெல்ல வைப்பதற்காகவே மக்கள் வாக்களிக்கின்றனர்.

கடந்த காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வீதியில் கொல்லப்பட்டனர்.வீடுகள் எரிக்கப்பட்டன.நாட்டை பங்களாதேஷமாக மாற்ற முயன்றார்கள். ஜனநாயகத்தை பாதுகாக்கவும் மனித உயிர்களைக் காக்கவும் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தார். ஜனாநாயகத்தை பாதுகாக்கத் தவறிய சஜித்திற்கோ அநுரவுக்கோ தேர்தலில் போட்டியிட எந்த தார்மீக உரிமையும் கிடையாது. நாட்டையும் ஜனநாயக்தையும் பாதுகாத்த ரணில் விக்ரமசிங்க 70 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார். நாடு பின்னடைந்து சுற்றுலா பயணிகள் வருகை தராத நிலை காணப்பட்டது. வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 420 ரூபாவுக்கு டொலரை  பெற்று அனுப்பும் நிலை காணப்பட்டது. கடனை மீளச் செலுத்த முடியாமல் வங்குரோத்து நாடாக வெளிநாடுகள் அறிவித்தன. வங்குரோத்து நாடுகளின் கடன் பத்திரங்களை வெளிநாடுகள் ஏற்கவில்லை. அத்தியாவசியப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டது. வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு அதன் நிபந்தனைகளை ஏற்றிருக்காவிட்டால் ஆப்கானிஸ்தான்,சிம்பாம்வே போன்ற நிலைக்கு நாடு சென்றிருக்கும். 2027 வரை அதே போன்றே ஒப்பந்தத்தை பாதுகாக்காவிட்டால் 2025 வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்படும். அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காது. அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும். ஓய்வூதியம் வழங்க முடியாது போகும். ரணில் விக்ரமசிங்க ஏற்படுத்திக் கொண்ட  ஒப்பந்தத்தை விடுத்து செயற்பட்டால், எந்த வேட்பாளராலும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுக்க முடியாது போகும்.  

2025 வரவு  செலவுத் திட்டம் தயாரிப்பதற்கு எவ்வளவு தொகை தேவை என சஜித்தினால் கூற முடியுமா என சவால் விடுகிறேன். ஜனாதிபதி செய்து கொண்ட உடன்படிக்கையை மீறினால் ஒரு மாதத்திலே நாடு மீண்டும் வீழ்ச்சியடையும். அரச ஊழியர்களுக்கு 3 வருட காலத்திற்கு தொடர்ச்சியாக 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது. சம்பள முரண்பாடு தீர்க்கப்பட்டு அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட இருக்கிறது" என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்  தலைவருமான சிவனேசதுறை சந்திரகாந்தன்:

''எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு'' என்ற திருக்குறளின் படி நாம் நன்றி மறவாது ரணில் விக்ரமசிங்கவுக்கு மீண்டும் ஒரு தடவை சந்தர்ப்பம் வழங்க வெண்டும். நாட்டை மிகவும் இக்கட்டான நிலையில் மீட்டவர் அவர்.  ஜநாயகத்தை நம்பி ஆயுதங்களை விட்டு வந்த எமக்கு தலைகுனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டது. கோட்டாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமை குறித்து வெட்கித் தலைகுனிந்தேன்.

சிறந்த இராஜதந்திரி என்ற வகையிலும் நாம் ஜனாதிபதியை ஆதரித்துள்ளோம். அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கும் நாம் பாராளுமன்றத்தில் உதவி செய்தோம். 2002 இல் புலிகளுடன் யுத்த நிறுத்தம் செய்யப்பட்ட  போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தார். அதன் பின்னரே நான் புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியில் வந்தேன். எதிர்காலத்தில்  சாத்தியமான அதிகாரப் பகிர்வுகளை  வழங்க வேண்டும். தேர்தலின் பின்னர் அதனை மேற்கொள்வதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். அதற்காகவும் அவரை ஆதரிக்கிறோம்.   விவசாயம்,மீன்பிடி,கைத்தொழில் துறை  சார்ந்ததாக கிழக்கின் அபிவிருத்திக்கு பல திட்டங்களை ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படும் நிலையில் எமது பிரதேச தந்தையர்களின் கனவு நனவாகும்.

ஜனாதிபதிக்காக வீடு வீடாகச் சென்று  வாக்கு சேகரிக்க இருக்கிறோம். ஜனாதிபதியின் வெற்றியில் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் சிறப்பான வெற்றியைக் காண்பிக்க வேண்டும். மாகாண சபைத் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட  வேண்டும் என்பது  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகும். எமது வளங்களை பயன்படுத்தும் வகையில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். எமது மக்களுக்குரிய உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும். எமது ஜனாதிபதி பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றிபெறுவது உறுதி" என்றும் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்,

நாங்கள் ஏன் ரணில் விக்ரமசிங்கவை  இந்த தேர்தலில் வெற்றியடையச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாரிய பொருளாதார வீழ்ச்சியை எமது நாடு சந்தித்தது. நூறு வருடங்கள் சென்றாலும் இந்நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பலர் கூறினார்கள்.

இந்த நாடு ஏழு தசாப்த காலமாக விட்டுவந்த ஒட்டுமொத்த பிழைகள், குறைபாடுகள் நாட்டை அதல பாதாளத்திற்குள் தள்ளிவிட்டது. இனிமேல் இலங்கையால் சுவாசிக்க முடியாது என்றார்கள்.நாட்டை விட்டு அரசியல் தலைவர்கள் ஓடினார்கள். சிலர் நாட்டுக்குள்ளே ஒழிந்து கொண்டார்கள். முன்னாள் ஜனாதிபதி இந்நாட்டைப் பொறுப்பேற்குமாறு கூறியபோது யாரும் முன்வரவில்லை.

நாட்டிலே அனைவரும் இருளைத் திட்டிக்கொண்டிருந்தபோது, பிரச்சினைகளை வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தபோது, நாட்டில் இருந்த இருளைப் போக்க வெளிச்சம் ஏற்றுபவராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தார். அவருக்கு மட்டக்களப்பு மக்களாகிய  நாங்கள் எல்லோரும் எமது பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.

காலி முகத்திடல் போராட்டக் களத்திற்கு சஜித் பிரேமதாஸ சென்றபோது, போராட்டக்காரர்களால் அடித்துத் துரத்தப்பட்டார். உலகில் வேகமாக ஓடக்கூடிய ஹுசைன் போல்டை விட வேகமாக ஓட்டம் பிடித்தார். ஆனால் அநுர குமார திஸாநாயக்க போராட்ட களத்திற்கு வருகை தந்தபோது அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. சஜித் பிரேமதாஸ பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய முற்பட்ட அதே நேரம், அநுர குமார திஸாநாயக்க பிரச்சினையை ஏற்படுத்தியவராக காணப்பட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

யாருமே தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வரவில்லை. இந்த நாடு பற்றி எரிந்தபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாகின. வெளியே செல்ல முடியாது. கேஸுக்கு வரிசை, எரிபொருளுக்கு வரிசை,மண்ணெண்ணெய்க்கு வரிசை. பணம் இருந்தாலும் பொருள் இல்லை. மிகப்பெரிய பிரச்சினை. மிகப்பெரிய திண்டாட்டம். இவ்வாறான சூழலில் இந்நாட்டை மீட்டெடுக்க வேண்டும். ஒரு வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக துணிச்சலாக முன்வந்தவர் தான் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. அதனை நாம் மறக்க முடியாது. அந்தக் காரணத்தினால் தான் இன்று இந்நாட்டின் அனைத்து மக்களும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை அடுத்த ஐந்து வருடங்கள் ஆட்சி செய்ய வேண்டும் என்றால் அனுபவம், புத்திக்கூர்மை, அறிவு மற்றும் சர்வதேச தொடர்பு உள்ள ஒரு தலைவரால் மாத்திரமே முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும். அவ்வாறான ஒரே ஒரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதை நான் உங்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவரின்  கேஸ் சிலிண்டர் சின்னம் மிக முக்கியமானதொரு சின்னம்.  கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்தால்  கேஸ் சிலிண்டர் வீடு தேடி வரும். கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்காவிட்டால்  நாம் கேஸ் சிலிண்டரைத் தேடி வீதிக்கு வரவேண்டி வரும். இதுதான் உண்மை. ஆகவே கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து கேஸ் சிலிண்டரை வீட்டுக்கு கொண்டு வருவதா? அல்லது வாக்களிக்காமல் கேஸ் சிலிண்டரைத் தேடி வீதிக்குச் செல்வதா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில்  தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலசிங்கம் பிரசாந்தன், மகளிர் அணி செயலாளர் ஏ.சுசிகலா, ஐ.தே.க மட்டு மாவட்ட அமைப்பாளர் எஸ். சுதர்சன், பொருளாளர் ஆறுமுகம் தேவராசா உள்ளிட்டோரும் உரையாற்றியதோடு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முக்கியஸ்தர்கள்,பிரதேச அரசியல் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

Read more