தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை என்பது நடைமுறைக்கு ஒத்து வராத ஒரு ஆவணம் மட்டுமே!

• வரி குறைக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அரசுக்கு வருவாய் ஈட்டும் பொறிமுறை இல்லை.

• கோட்டாபயவின் கொள்கையையே தேசிய மக்கள் சக்தியும் பின்பற்றுகிறது.

• தேசிய மக்கள் சக்தியின் இரட்டை வேடம் டெலிகொம் பரிந்துரையில் உறுதியானது.

• தேசிய மக்கள் சக்தியின் கொள்கை அறிக்கையில் தற்போதைய அரசின் பணிகளும் இடம் பெற்றுள்ளன - தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ.

• நாட்டைக் கட்டியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவம் நாட்டுக்கு தொடர்ந்தும் தேவை - சிரேஷ்ட வங்கி முகாமையாளர் (ஓய்வு பெற்ற) காமினி சேனாநாயக்க.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வெறும் ஆவணம் எனவும், அதில் உள்ள கொள்கைகளை செயல்படுத்த அவசியமான நிதி ஒதுக்கீட்டின் அளவு அல்லது அதனை பெறுவதற்கான வழிமுறை குறித்து அவர்களுக்கு எந்த புரிதலும் இல்லை என கொள்கைப் பிரகடனத்தில் இருந்து தெளிவாகிறது எனவும் தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர்அசேல பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்தக் கொள்கைப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளவாறு வரி குறைக்கப்பட்டால், இழக்கப்படும்  பல பில்லியன் ரூபா அரச வருமானத்தை  ஈடுகட்டுவதற்கான வழிமுறை எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை என  சுட்டிக்காட்டிய அவர், கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியிலும் இவ்வாறே வற் வரி குறைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு, பிளவர் வீதியிள் உள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல்அலுவலகத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டெலிகொம் நிறுவனத்தை விற்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கடந்த காலத்தில் தொடர்ந்தும் கூறிவந்த தேசிய மக்கள் சக்தியின் தலைவர், தற்போது குறித்த நிறுவனத்திற்கு முதலீட்டாளரை வரவழைப்பது பிரச்சினையில்லை என்று குறிப்பிடுவதன் ஊடாக இவர்களின் இரட்டை வேடம் வெளிப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த தேசிய வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் அசேல பெர்னாண்டோ,

‘‘தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையை படிக்கும் போது, அதன் கருப்பொருளை "கனவு சொர்க்கம் - பல பில்லியன்கள்" என்று திருத்த வேண்டும் என்றே எமக்கு விளங்கியது.

அதைப் படிக்கும் போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு நிதி ஒதுக்கீடு தேவை, அவற்றை எப்படி பெறுவது என்பது குறித்து அவர்களுக்கும் எந்த அறிவும் இல்லை  என்பது உறுதியாகிறது. ஆனால் அதைப் படிப்பவரை கனவுகள் மூலம் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அரச சேவையாளர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை ஐம்பத்தைந்தாயிரம் ரூபாவாகக் கொண்டுவருவதற்கான பரிந்துரை 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு இருபத்தைந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு முன்வைத்த கோரிக்கைகள் இவையல்லவா? ஆனால், பல தொழிற்சங்கங்களைக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரச சேவை பற்றி எதுவும் குறிப்பிடாதது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம்.

அத்துடன், தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகளை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்திற்கு உகந்த யோசனையொன்றை சமர்ப்பித்துள்ளார். அது தொடர்பான பரிந்துரைகள் கிடைத்தவுடன் அதை நடைமுறைப்படுத்தலாம்.

ஆனால் தனி நபர் வருமானம் ரூ.1 இலட்சத்தில் இருந்து விதிக்கப்படும் வரி, ரூ.2 இலட்சமாக மாற்றப்படும் என்று அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

இது முதல் பார்வையில் நல்லதொரு பிரேரணையாக இருந்தாலும், அதன்போது இழக்கப்படும் 68 பில்லியன் ரூபா அரச வருமானத்தை எவ்வாறு ஈடுகட்டுவது என அவர்களின் கொள்கைப் பிரகடத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. அந்த வருமானங்கள் இதுவரை செலுத்தப்படாத வரிகளில் இருந்து வசூலிக்கப்படும் என்பதே அவர்களின் பதிலாகும்.

2023 டிசம்பர் 31, நிலவரப்படி, இந்த நாட்டில் நிலுவையில் உள்ள வரிகள் சுமார் 1068 பில்லியன் ரூபாவாகும். இவற்றில் 878 பில்லியன் ரூபாவுக்கு வரி மேன்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டபூர்வ நடைமுறைகளை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதால், மிக விரைவாகவும், எளிதாகவும் நிலுவைத் தொகையை வசூலிக்க முடியாது.

கடந்த கால கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியும் இவ்வாறே வற் வரியை குறைத்தது. இதனால், சில மாதங்களில் பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. நாட்டில் போராட்டமும் இடம்பெற்றது. அதற்கிணங்க நாடு மீண்டும் காலி முகத்திடல் போராட்ட களத்திற்கு தள்ளப்படுமா என கேள்வி எழுப்புகிறோம்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன்  கலந்துரையாடலுக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அனுர திஸாநாயக்க ஆகிய இருவரையும் அழைத்தார்.

ஆனால் அந்த அழைப்பை விடுத்து  நாற்பத்தெட்டு மணிநேரம் கடந்துவிட்டிருந்தாலும், இதுவரை அவர்களின் கொள்கையை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்நாட்டு மக்களுக்கு உண்மையை அறியும் சந்தர்ப்பம்  கிடைக்கவில்லை.

மேலும், தற்போதைய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பல கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் அவர்களின் கொள்கை பிரகடனத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக, நுண் நிதி மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்க புதிய வங்கி நிறுவப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கியின் பரிந்துரைகளின்படி, ஒவ்வொரு வணிக வங்கியிலும் இதற்காக ஒரு தனி பிரிவு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.

மேலும், கொள்கை வட்டி விகிதம் நிலையானதாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் வங்கியியல் நிபுணர்கள் என்ற வகையில், இந்த நாட்டின் கொள்கை வட்டி விகிதங்கள் தற்போது மேலும் ஸ்திரமாகி வருகின்றன என்பதை இந்நாட்டு மக்களுக்குச் கூறுகிறோம்.

அரச வங்கிகளுக்கு மறுமூலதனம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அரச மற்றும் தனியார் வங்கிகளின் மறுமூலதனத்திற்காக 450 பில்லியன் ரூபா கையிருப்பை ஒதுக்கியுள்ளார். அந்தப் பின்னணியில்தான் இந்த விடயத்தை அவர்கள் முன்வைக்கிறார்கள்.

மேலும், முதலீடுகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. 1977 முதல் இன்று வரை, இந்த நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டுவரும்போது போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் செய்து அவற்றை தடுத்த மக்கள் விடுதலை முன்னணி, இன்று  தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில்  முதலீடுகளுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கியிருப்பது நகைச்சுவையாக இருந்தாலும், அது மகிழ்ச்சியான விடயம் என்பதையும் கூற வேண்டும்.

அத்துடன், டெலிகொம் நிறுவனத்தின் விற்பனையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் கூறி வந்தது. ஆனால் இப்போது டெலிகொம் நிறுவனத்திற்கு முதலீட்டாளரை கொண்டு வருவது ஒரு பிரச்சினையே இல்லை என்று அவர்களின் தலைவர் கூறுகிறார். ஏன் இந்த இரட்டைக் வேடம்  என்று கேள்வி எழுப்புகிறோம். அரச நிறுவனங்களை திறம்பட நடத்துவதற்கு தனியார் தொழில்முயற்சியாளர்கள் அவசியம் என்பது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தாகும்.

மேலும், ஏழை குடும்பங்களுக்கு அஸ்வெசுமவிற்கு பதிலாக பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல பிரிவுகளின் கீழ் அஸ்வெசும வழங்கப்படுகின்றது. அதன்போது மிகவும் வறுமையில் உள்ள குடும்பத்திற்கு பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது.

அப்படியானால், பதினைந்தாயிரம் ரூபாய் பெறும் குடும்பத்திற்கு ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பத்தாயிரம் ரூபாவை வழங்குமா என கேள்வி எழுப்புகிறோம். கொள்கை பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளபடி, பொருளாதாரத்தில் மிகவும் கீழ் மட்டத்தில்  உள்ள மக்கள் பெறும் பணம் குறைக்கப்படும் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த நிதியை பெற்றுக்கொள்ளும் முறை குறித்தும் எந்த வகையிலும் இங்கு குறிப்பிடப்படவில்லை.

உண்மையில், இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்யும்போது, இது நடைமுறைச் சாத்தியமற்ற  திட்டங்களைக் கொண்ட வெறுமனே ஒரு ஆவணம் என்பதைக் காட்டுகிறது. எனவே, மக்கள் இதை கவனமாக படித்து, அதில் உள்ளவை நடைமுறைச் சாத்தயமான மற்றும் யதார்த்தமான முன்மொழிவுகளா என்பதை புரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  இந்நாட்டிற்கும், சந்தர்ப்பத்திற்கும் ஏற்ற பொருளாதாரக் கொள்கையின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை கட்டியெழுப்பியுள்ளார் என்பதை நாம் அறிவோம். அந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்து நாட்டின் பொருளாதாரத்தையும் எமது பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.’’ என்றார்.

சிரேஷ்ட வங்கி முகாமையாளர் (ஓய்வு பெற்ற)  காமினி சேனாநாயக்க,

‘‘கடன் மறுசீரமைப்புக்குப் பிறகு 2028 ஆம் ஆண்டு முதல் நாடு சாதாரணமாக இயங்க முடியுமான வேலைத் திட்டத்திற்கு. ஐ.எம். எப் அமைப்பினால் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. அதன்படி அராங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தத் வேலைத் திட்டத்தில் இருந்து எந்தத் தரப்பினரும் விலகிக் கொண்டால், இந்த நாடு மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, மீள முடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

தேசிய மக்கள் சக்தி  நேற்று முன்வைத்துள்ள கொள்கைப் பிரகடனத்தில் சட்டக் கட்டமைப்பை மாற்றுவது, நிறுவன மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தின் 3074 பில்லியன் ரூபா வருமானத்தை தாக்கும் பிரேரணைகள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதைக் கூற வேண்டும்.

உண்மையில் இந்த வேளையில் இந்த நாட்டுக்கு தேவைப்படுவது தற்போது கட்டியெழுப்பப்பட்டு வரும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் ஒரு தலைவரே அன்றி ஒரு கட்சியின் தலைவர் ஒருவரை நியமிப்பதல்ல.

அதனால்தான், IMF வேலைத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி, சர்வதேச அளவில் மதிக்கப்படும் வகையில், இந்நாட்டை  கட்டியெழுப்பிய தலைமைத்துவம், மீண்டும் இந்த நாட்டிற்கு தொடர்ந்தும் தேவை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.’’ என்றார்.

Read more