மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டம் 2025 இல் முடிவுக்கு வரும்!

• வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தாலும், இறுதியில் நிவாரணம் கிடைக்கும்.

• பொறுமையுடன், பலமாக இருந்த மக்கள் அனைவரும் நாட்டைக் கட்டியெழுப்புவதில் அங்கம் வகிப்பார்கள்.

• நாட்டுக்கு புதிய பொருளாதாரத்தை வழங்குவதே எனது தேவை : சஜித் அனுரவிற்கு இதைச் செய்ய முடியாது- ஜனாதிபதி தெஹிவளையில் தெரிவிப்பு.

மக்களின் வாழ்க்கைச் சுமைக்கான போராட்டத்தை அடுத்த வருடத்தில் முடிவுக்கு கொண்டுவருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதாரத்தை முறையாக முகாமைத்துவம் செய்து, ரூபா மேலும் வலுவடையச் செய்து, பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்க கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாகவும் இறுதியில் நிவாரணம் கிடைக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தெஹிவளையில் நேற்று (15) பிற்பகல் இடம்பெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டதுடன் அவர்கள் ஜனாதிபதியை மிகவும் உற்சாகமாக வரவேற்றனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், புதிய பொருளாதாரம், புதிய நாடு மற்றும் புதிய அரசியல் முறைமையைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை தாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.  புதிய பொருளாதாரத்தை நாட்டுக்கு வழங்குவதே தனது தேவை எனத்  தெரிவித்த ஜனாதிபதி, அதனை சஜித்துக்கோ அல்லது அனுரவுக்கோ செய்ய முடியாது எனவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்மசிங்க மேலும் கூறியதாவது:

‘’இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் என்னுடன் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவியை ஏற்க யாரும் முன்வரவில்லை. அந்த பதவிக்கு வேறு யாரும் இல்லாததால் நான் அப்போது பிரதமரானேன்.

அரசியல்வாதிகளாகிய எங்களுக்கு இரண்டு கடமைகள் உள்ளன. முதலில் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும். இரண்டாவது, மக்களை வாழ வைக்க வேண்டும். ஆனால் அப்போது யாரும் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இருக்கவில்லை.

இந்நாட்டு மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு போன்றவற்றை வழங்க முடியாத நிலை இருந்த போது, அரசியல்வாதிகளாகிய அவர்கள் வருந்தவில்லையா? இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லையா? அன்று மக்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ளாத சஜித்தும் அநுரவும் இன்று பதவியை கேட்கின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நாடு ஸ்திரமாக உள்ளது. ரூபாவை வலுப்படுத்தியுள்ளோம்.

இதனால், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்து வருகிறது. ஆனால் மக்களுக்கு இன்னும் பிரச்சினைகள் உள்ளன. பல குடும்பங்களில் வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே பெரிய போராட்டமே நடக்கின்றது எனலாம். அந்த போராட்டத்தை முடிக்கவே நான் முயற்சிக்கிறேன். ரூபாவைத் தொடர்ந்து வலுப்படுத்துவதால் அடுத்த ஆண்டு அந்த போராட்டத்தில்  நாம் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம்.

நம் நாட்டைப் போன்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட ஏனைய நாடுகள் மீண்டும் எழுச்சி பெற நீண்ட காலம் எடுத்தது. அந்த நாடுகள் எடுக்கும் கடினமான நடவடிக்கைகளை நாம் எடுக்காமல் எவ்வாறேனும்  அனைவரையும் பாதுகாத்து நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதன்படி இன்று நாம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம்.

ஆனால் இந்த நிலைபேற்றுத்தன்மை மாறலாம். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுக்காவிட்டால், இவை அனைத்தும் முடிவுக்கு வரும். இந்தத் திட்டத்தைத் தொடரவும், நாம் அடைந்த பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் ஒரு ஆணையை நான் கேட்கிறேன். இந்த நாட்டிற்கு புதிய பொருளாதாரத்தை வழங்குவதே எனது தேவையாகும்.

இதை சஜித்திற்கோ, அனுரவிற்கோ செய்ய முடியாது. பல்வேறு நிவாரணங்களை வழங்குவதாக இருவருமே மக்களுக்கு அறிவித்து வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அனுரகுமார என்னை விவாதத்திற்கு வருமாறு அழைத்தார். நான் அதற்குத் தயார் என்றேன். ஆனால் இதுவரை அதற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஆனால் சர்வதேச நாணய நிதியம் தற்போது நம் அனைவரின் கொள்கை அறிக்கைகளையும் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர்  ஜூலி கொசெக் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “வரலாற்றில் மிக மோசமான சவாலை முறியடிக்க இலங்கைக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் நோக்கங்களை அடைவது மிகவும் முக்கியமானது”

மறுசீரமைப்புகளைத் தொடர வேண்டியது அவசியமாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் முடிவை இலங்கை மக்களே எடுக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் கண்ணோட்டத்தில், இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

ஆனால், இலங்கை தனது வரலாற்றில் சந்தித்த மிக மோசமான நெருக்கடியில் இருந்து முழுமையாக மீள வேண்டுமானால் இந்த வேலைத் திட்டத்தின் மூலம் பெற்ற சாதனைகளைப் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்." எனவே, தற்போதுள்ள வேலைத்திட்டம் அவ்வாறே அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சஜித் அல்லது அநுர கூறுவது போன்று தற்போதைய வேலைத் திட்டத்தில் திருத்தம் செய்ய முடியுமா என்பது குறித்து இதில் சர்வதேச நாணய நிதியம் எதுவும் குறிப்பிடவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் எமது கடன் தொடர்பில் கலந்துரையாடி விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் திசைகாட்டி அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக மாற்று கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வை முன்வைப்பதாக அவர்கள் கூறினர்.

ஆனால் நாம் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இருப்பதால், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைப் போன்று கடன் நிலைபேற்றுத்தன்மை பகுப்பாய்வை மேற்கொள்ள முடியாது. சந்தை அணுகுமுறையைக் கொண்ட நாடுகளுக்கான இறையாண்மை ஆபத்து மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை பற்றிய கட்டமைப்பே எமக்கு பொருந்துகின்றது.(Market risk and sovereign debt sustainability framework).  இவர்களுக்கா நம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்?

சில நேரங்களில் நாம் குறுகிய காலத்தில் மிகவும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால் இறுதியில் எமக்கு நிவாரணம் கிடைக்கும். எனவே, இந்தப் பணியைத் தொடர உங்கள் ஆணையைத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புதிய பொருளாதாரம், புதிய நாடு, புதிய அரசியல் முறைமையைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை நான் ஏற்கனவே ஆரம்பித்துள்ளேன். இப்பணியைத் தொடர அனுபவம் வாய்ந்த குழு முன்வர வேண்டும். எனவே, அந்த ஆணையை எனக்கு வழங்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க,

‘‘இலங்கையில் 22 மில்லியன் மக்கள் வீதியில் நிற்கும் நேரத்தில், எந்தப் பொறுப்பையும் ஏற்க முடியாது என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன், அனுரகுமார திஸாநாயக்க பல்வேறு நிபந்தனைகளை விதித்து வழிவிட்டுச் சென்றார். அப்போது அந்த பொறுப்பை 'முடியும்' என ஏற்க ஒருவர் மாத்திரமே முன்வந்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு ஆசனம் மட்டுமே இருந்தது. அவ்வேளையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையானவர்களும் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தயின் சில  உறுப்பினர்களும் அந்தந்த கட்சிகளில் இருந்துகொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்தனர். அப்போது நாட்டில் நிலவிய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க நாட்டு மக்களுக்கு உதவவே அவர்கள் இவ்வாறு ஆதரவு வழங்கினர்.

அன்று அனைவரும் ஒன்றிணைந்து நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதால் இன்று நாம் ஒரு நாடாக பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இன்று நாடு ஸ்திரமான நிலையை அடைந்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பொறுப்பை ஏற்று, இலங்கை மீதான சர்வதேச சமூகத்தில் நாம் இழந்திருந்த  நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.

நீண்ட காலமாக சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றிய தலைவர் என்ற வகையில் அந்த நம்பிக்கையை மிக விரைவாக கட்டியெழுப்ப முடிந்தது. 2022ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் அந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது. அதேநேரம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்தது. எனவே மிகவும் சிரமப்பட்டு அடைந்த முன்னேற்றம் தொடரும் வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்ற வேண்டும்.’’ என்றார்.

அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி,

‘‘2022ஆம் ஆண்டு, இந்த நாடு பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்து, ஒரு தலைவரைத் தேடிக் கொண்டிருந்த வேளையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை நிபந்தனையின்றிப் பொறுப்பேற்றார். இன்று பங்களாதேஷில் நடப்பது போல், அவரை மிரட்டி, வீட்டுக்கு தீ வைத்து, நூலகத்தை அழித்து, அரச அதிகாரத்தைக் கைப்பற்ற சிலர் முயன்றனர்.

அன்று அவர் ஒரு அடி ஏனும் பின்னோக்கி வைத்திருந்தால் இந்த நாட்டில் இன்று பங்களாதேஷ் இருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். இன்று பங்களாதேஷில் 19 மணி நேர மின்வெட்டு உள்ளது. 213 ஆடைத் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. பங்களாதேஷில் முதலீடு செய்துள்ள இலங்கை ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் இன்னும் ஒருமாத காலத்திற்கு அந்நாட்டின் நிலைமையை அவதானித்து தமது வர்த்தகத்தை வேறு நாட்டிற்கு அல்லது இலங்கைக்கு மாற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இத்தகைய அழிவில் இருந்து இலங்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காப்பாற்றினார். அப்படி காப்பாற்றப்பட்ட நாட்டில், மக்கள் இன்னல்களுக்கு ஆளான போது தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஓடியவர்கள் இன்று தமக்கு அதிகாரம் வழங்குமாறு கேட்கின்றனர். எனவே, இந்தப் பயணத்தைத் தொடர்வதா, சிரமத்துடன் கட்டியெழுப்பிய நாட்டை முன்னோக்கி நகர்த்துவதா, அல்லது ஆரம்பித்த வேலைத்திட்டத்தை நிறுத்தி மாற்றங்களைச் செய்து அழிப்பதா? என்பதை இந்நாட்டு மக்கள் செப்டெம்பர் 21ஆம் திகதி தீர்மானிக்க வேண்டும்.’’ என்றார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன,

‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் ஆறு மாதங்கள் இந்த நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார். சர்வதேச சமூகம் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்தது. நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற முடிந்தது.

எனவே, முதலாம் ஆண்டு இறுதிக்குள், அவரால் இந்த நாட்டின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்க முடிந்தது. இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்தும், நலன்புரித் திட்டங்களைச் செயல்படுத்தி, குறைந்த வருமானம் பெறும் மக்களைப் பாதுகாக்கவும் அவர் மறக்கவில்லை.

எனவே, மக்களுக்கான திட்டத்தைக் கொண்ட தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. தெஹிவளை, கல்கிஸ்ஸ தொகுதியில் வாழும் மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதற்கான பல திட்டங்கள் அவரது நிகழ்ச்சி நிரலில் உள்ளன.

எனவே, செப்டெம்பர் 21ஆம் திகதி நாட்டை ஆளக்கூடிய தலைவராகவும், பாராளுமன்றத்தில் நம்பிக்கையைப் பெறக் கூடியவராகவும், சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்று நாட்டில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தக்கூடியவராகவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே உள்ளார். எனவே, வேறு எந்த வேட்பாளரும் வெற்றி பெற முடியாது என்பதைக் கூற வேண்டும். எனவே,கேஸ் சிலிண்டர் சின்னத்தை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார்.

தெஹிவளை கல்கிஸ்ஸ முன்னாள் மேயர் தனசிறி அமரதுங்க,

‘’ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர் ஜனாதிபதி வேட்பாளராக வரும்போது ஏனைய வேட்பாளர்கள் இந்தப் பிரதேச மக்களுக்கு முக்கியமில்லை. நீங்கள் எனது அரசியல் ஆசான். ஒரு கட்டத்தில் நான் வேறு தரப்பில் இணைந்து செயற்பட வேண்டியிருந்தது, ஆனாலும் இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய நபருடன் நான் பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக கட்சி பேதமின்றி தெஹிவளை - கல்கிஸ்ஸ பிரதேசத்தில் செயற்பட்டு வருகின்றோம். இடையில் என்ன நடந்தாலும் பரவாயில்லை நாம் திசைகாட்டிக்கு என்று ஒரு கூட்டம் இருக்கிறது. அவர்கள் நாட்டை அழித்தாலும் பரவாயில்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் வெறுப்புணர்வை விதைப்பவர்கள்.

முன்னாள் அமைச்சர் சுனேத்ரா ரணசிங்க,

‘’இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாடு வீழ்ந்த நிலையை நாம் யாரும் மறந்துவிடவில்லை. எனவே, நாம் எங்கு சென்று மக்களிடம் பேசினாலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்போம் என அனைவரும் கூறிவருகின்றனர்.

தொகுதி முழுவதும் நாங்கள் மேற்கொண்ட தேர்தல் பிரசாரம் வெற்றி பெற்றுள்ளது. மக்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்தப் பகுதியில் வீடு வீடாகச் சென்று செய்யும் பிரச்சாரம் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

சில இடங்களில் ஒரு முறை, இரு முறை அல்ல மூன்று முறை வீடு வீடாகச் சென்றோம். எனவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சுற்றி பெருந்தொகையான மக்கள் திரண்டு வருவது தெளிவாகத் தெரிகிறது.

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று, நீங்கள் வாக்குச் சீட்டை எடுக்கும்போது, உங்கள் பெறுமதியான வாக்கை கீழே இருந்து மூன்றாவதாக உள்ள கேஸ் சிலிண்டர் சின்னத்தின் முன் புள்ளடியிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.’’ என்றார்.

Read more