இனம், சாதி, மதம் அன்றி, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

• சிறுபான்மை அரசியல் கட்சித் தலைவர்கள் ஏனைய வேட்பாளர்களின் பின்னால் சென்றாலும், தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு எனக்கு உண்டு.

• நாம் விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு மாறாவிட்டால், 2035-2040இல் மீண்டும் ஒரு நெருக்கடி நிலை ஏற்படலாம்.

• இளைஞர் சமூகத்திற்கு ஒளிமயமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க, அரசியல் சமூக கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும்.

• கடவுச்சீட்டு பெறும் நெரிசல் விரைவில் தீர்க்கப்படும்: மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அரசாங்கமென்ற வகையில் மன்னிப்பு கோருகிறோம்: டிஜிட்டல்மயமாக்கல் திட்டம் மாற்றப்படாது.

• காலாவதியான பொருளாதார முறைமைகளுக்குத் திரும்புவது இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பானது - தொழில் வல்லுநர்களுடனான  “Ask Me Anything” நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை விரைவாக ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றாவிட்டால் 2035-2040 காலப்பகுதியில் மற்றுமொரு நெருக்கடி ஏற்படக்கூடும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (02) கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  “Ask Me Anything” என்ற விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இங்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையின் சகல துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவிலான அறிஞர்கள், தொழில் வல்லுநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். ஜனாதிபதிக்கு நேரடியாக தமது கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமையும் விசேட அம்சமாகும்.

இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொழில் வல்லுநர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டதுடன், ஜனாதிபதியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சாதகமான பதில்களை வழங்கினார்.

கடவுச் சீட்டு பெறுவதில் உள்ள நெரிசலை விரைவில் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதனால் மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றியின் பின்னர் தாம் விரும்பிய அமைச்சரவையை நியமிக்காது, நாட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை நியமிக்கவுள்ளதாகவும், இதற்காக மக்கள் தமக்கு விருப்பமானவர்களை புதிய பாராளுமன்றத்திற்கு அனுப்புவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அத்துடன், சிறுபான்மை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள போது, ​​இந்நாட்டின் பெரும்பாலான தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

''தற்போது, ​​சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன எக்சிம் வங்கி மற்றும் 17 நாடுகளுடன் கடன் நிலைத்தன்மை, கடன் நிவாரணம் மற்றும் 2032 வரையிலான முன்னோக்கி செல்லும் வழிகள்  குறித்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழுவுடன் உடன்பாட்டை எட்டியுள்ளோம். இந்தப் பாதையில் தொடர்ந்து செல்லப் போகிறோமா அல்லது மாற்றப் போகிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வி. அரசாங்கத்தின் வருவாய் மற்றும் செலவினங்களின் தற்போதைய அளவுகோல்களை மாற்ற முடியாது. வரித் திருத்தங்கள் செய்யப்படலாம் என்றாலும், அதற்கு முழு அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

மாற்று வருமான வழிகளை முன்வைக்காமல்  வரிகளைக் குறைத்து,  அரச வருவாயைக் குறைத்து, நலன்புரி நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கச் செலவினங்களை அதிகரிக்க ஏனைய கட்சிகள் பரிந்துரைக்கின்றன. 2019 இல் வரி குறைப்பு மற்றும் அதிகப்படியான சலுகைகள் காரணமாக வருமானம் குறைந்தது. இதனாலேயே 2022 இல் பொருளாதார சிக்கல்கள் எழுந்தன. கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என்று வினவ விரும்புகிறோம்.

எனவே, நாம் இப்போது ஒரு முடிவை எடுக்க வேண்டும். கொள்கை விவரங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அடுத்த ஆண்டு வரை சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 3 பில்லியன் டொலர்களைப் பெற இருக்கிறோம். 2040-2042 வரை கடன் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்துடன் கூடிய ஒப்பந்தமும் உள்ளது. அதை இழக்க நாம் தயாரா? நம் நாட்டிற்கு நடைமுறைச் சாத்தியமற்ற மாற்றம் தேவையில்லை. இந்த நெருக்கடியை சமாளித்து, 2042இற்குள் ஸ்திரத்தன்மையை அடைய முடியும். ஆனால் நாம் விரைவில் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாறவில்லை என்றால், 2035-2040இல் நாம் தொடர்ந்து கடன் வாங்கும்போது மற்றொரு நெருக்கடி ஏற்படலாம்.

எவ்வாறாயினும், போட்டித்தன்மை வாய்ந்த ஏற்றுமதி சார்ந்த, டிஜிட்டல் மற்றும் பசுமைப் பொருளாதாரமாக மாறுவதன் மூலம், தன்னிறைவான பொருளாதார மாற்றத்தை நோக்கி நாம் செல்ல முடியும். எங்களிடம் நிலம் போன்ற கணிசமான சொத்துக்கள் உள்ளன. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், உலக மக்கள் தொகை சுமார் 2 பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்தைக்குத் தேவையான உணவளிக்க நமது விவசாயத்தை நவீனப்படுத்த வேண்டும். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 2.5 மில்லியனில் இருந்து 5 மில்லியனாக உயர்த்த வேண்டும்.

சுகாதாரம், கல்வி மற்றும் சமூக நலன்புரி ஆகிய துறைகளில் தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம் இதை 10% ஆக குறைக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். தோட்டத்தில் தற்போதுள்ள பாரம்பரிய விவசாயத்திற்கு பதிலாக விவசாய வணிகங்களை உருவாக்கவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தற்போது லயன்அறைகளில் வசிப்பவர்களுக்கு நில உரிமை வழங்கவுள்ளோம். ஊழியர்களின் சேமலாபநிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் பணத்தை, பத்திரங்கள் மற்றும் கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்வதற்குப் பதிலாக, அதற்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து ஆராய்கின்றோம். தொழிற்சங்கங்களையும் முதலாளிகளிகளையும் இந்த செயல்பாட்டில் இணைக்க எதிர்பார்க்கிறோம்.

பெரும்பான்மையான மக்கள் தொகையில் குறைவான பிரதிநிதித்துவம் கொண்ட பெண்களின் நலனுக்காக பல விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளோம்.

சாதி, இனம் போன்று நீடித்து காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்று தொடர்பிலும் கவனம் செலுத்தியிருக்கிறோம். இனம், சாதி, மதம் வேறுபாடின்றி அனைவரையும் பாதித்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தல் நடைமுறை காண கிடைத்துள்ளதையிட்டு ஜனாதிபதி என்ற வகையில் நான் பெருமையடைகிறேன்.

இந்த சூழ்நிலை ஒரு நாடாக ஒன்றிணைவதற்கும், தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் வாய்ப்பளிக்கும். குழந்தை பராமரிப்பு மற்றும் குடும்ப வன்முறை போன்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவு இருந்தாலும், அதற்குள் மேலும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

அதேபோல் நமது அரசியல் முறையிலும் மாற்றம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சரிவு அரசியல் முறையினையும் பாதித்துள்ளது. மற்றைய கட்சிகள் பழைய பொருளாதார கொள்கைகள் மீதே தங்கியுள்ளன. அது இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் முயற்சியாகும். அவ்வாறான செயற்பாடுகளை நம்பியிருக்க முடியாது.

அரசியல் கட்சிகள் எடுக்கும் தீர்மானங்களை நீதிமன்றம் வரையில் கொண்டு செல்லும் கலாச்சாரத்திற்கு மாறாக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒரே சட்ட வரையறைக்குள் செயற்படும் வகையில் ஜேர்மனி போன்ற  ஐரோப்பிய நாடுகளில் செயற்படுத்தப்படும் நடைமுறையை உருவாக்க வேண்டும்.

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம். சிலர் ஊழல் மோசடி தொடர்பான 400 கோப்புகள் பற்றி பேசுகின்றனர். அவற்றில் 15 பேர் மட்டுமே சட்ட நடவடிக்கை எடுக்க கூடியவையாகும். எனவே, பேசிக்கொண்டிருப்பதை விடுத்து அதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

நாம் ஆட்சிக்கு வந்த பிறகு அதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை கோரினோம். ஊழல் தடுப்புச் சட்டம், குற்றச் செயல்கள் தொடர்பான சட்டம் போன்ற புதிய சட்டங்களை உள்ளடக்கிய ஊழல் எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும். அதற்காக, இங்கிலாந்தைப் போல பாராளுமன்றத் தரநிலை சட்டத்தில் திருத்தங்களை  செய்ய எதிர்பார்க்கிறோம். அதனால் பொருளாதாரத்தை போன்றே அரசியல்,  சமூக கட்டமைப்புக்களும் மாற்றத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த விரிவான மாற்றம் இளையோருக்கு ஔிமயமான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும். 1991இல் வியட்நாம் தொழில் அமைச்சருடன் வௌிநாட்டு முதலீடுகள் குறித்து உரையாடியது நினைவிற்கு வருகிறது. நாம் விரைவில் மாற்றத்தை எட்டாத பட்சத்தில் மீண்டும் அவரிடம் பேசி ஆலோசனை கேட்க வேண்டிய நிலைமை உருவாகும். எனவே செப்டம்பர் 21ஆம் திகதி இந்த விடயங்களை நினைவில் கொள்ளுங்கள்" என்றும் தெரிவித்தார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர:

கடந்த நாட்களில் சீர்திருத்தச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது எதிர்கால அரசியல் பற்றி சிந்திக்காமல் மிகக் கடுமையான சவால்களுக்கு முகம்கொடுத்தார்.

சில அமைச்சர்கள் அடுத்த ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு செயற்படுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினர். உங்கள் செயற்பாடுகள் அடுத்த ஜனாதிபதியாக தெரிவாக தடையாக இருக்கலாம் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி "தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரியான நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகளை எடுக்க வேண்டும்" என்றார்.

ஜனாதிபதி தேர்தலொன்றுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், பிரதமர் பதவியை தருவதாக 6 எம்.பிக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அவர் வென்ற பின்பு அவர்களில் எவருக்கும் அந்த பதவி கிடைக்கவில்லை என்பதையும் அமைச்சர் நினைவு கூர்ந்தார்.

யார் என்ன சொன்னாலும் ஜனாதிபதி "தற்போதைய வேலைத்திட்டங்களை தொடர்ந்து செயற்படுத்துவோம். பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய சட்டமூலங்களை தாமதிக்க வேண்டாம்" என்பதையே வலியுறுத்துவார்.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையிலும், முந்தைய அரசாங்கங்களினாலும் , IMF உடனும் நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்ற பொருளாதார மாற்றச் சட்டம், மின்சார சீர்திருத்தச் சட்டம் மற்றும் பொது நிதி முகாமைத்துவச் சட்டம் போன்ற முக்கியமான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது.

அதன்படி ஜனாதிபதியின் வலுவான தலைமைத்துவமும், கொள்கைகளை செயற்படுத்தும் துணிச்சல் என்பன எதிர்காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் சீர்த்திருத்தங்களை பின்பற்றி நடப்பதற்கான வழியை உருவாக்கியிருப்பதோடு. இலங்கைக்கு சரியான பயணப் பாதையை காட்டியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுபவமும் எங்களது முயற்சிகள்  சாத்தியமாவதற்கு பெரிதும் வழி செய்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடுகளை எட்டுவது மிகவும் எளிதான விடயம் என்று சிலர் நினைக்கின்றனர்.

ஆனால் அது மிகவும் கஷ்டமான செயல்முறை என்று சொல்ல வேண்டும். இந்த செயல்முறைக்கு சர்வதேச நாணய நிதியத்துடன் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகம், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கடன் வழங்கும் நிறுவனங்களுடனும் சவாலான பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியருந்தது. சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பும் அர்ப்பணிப்பும் அளப்பரியது" என்றும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா:

''ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுபவம் மிக்கவர். அதேபோல் கடினமான தீர்மானங்களை எடுக்கும் துணிச்சல் கொண்டவர். அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியது போலவே, சிரமங்களை எதிர்கொண்ட போது அவரது உறுதியான அணுகுமுறை நாட்டை ஸ்திரத்தன்மைக்கு இட்டுச் சென்றுள்ளது.

குறுகிய கால வாக்குறுதிகள் மற்றும் நிறைவேறாத கனவுகளைப் பற்றி பேசுவதால் வாக்காளர்களை கவரலாம். எவ்வாறாயினும், 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்ட நீண்டகால நடைமுறைச் சாத்தியமான திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மட்டுமே உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொய்யான வாக்குறுதிகளை வழங்காமல் எவ்வளவு சவால்கள்  வந்தாலும் மக்களுக்கு உண்மையை சொல்லும் ஒரே தலைவர். மற்ற வேட்பாளர்கள் முன்வைக்கும் கொள்கைகள் நாம் இதுவரை அடைந்திருக்கும்  தொடர்ச்சியான பொருளாதார மீட்சியை ஆபத்தில் தள்ளும்" என்றார்.

பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க, காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நெரஞ்சன் தேவ் ஆதித்ய, முன்னாள் அமைச்சர்களான மனுஷ நாணயக்கர, ரவி கருணாநாயக்க, சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Read more