வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடந்த கலந்துரையாடல் குறித்து ஜனாதிபதி, ராமன்ய பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கம்

வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.

நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (27) முற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்கு ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரர் வண. மகுலேவே விமல நாயக தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.

ஜனாதிபதி தனது தேர்தல் பணிகளை ஆரம்பித்த பின்னர், இவ்வாறு ராமன்ய மகா நிகாயவின் மகா நாயக தேரரரைச் சந்தித்தார். அதன்போது வண, வலேபொட குணசிறி தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் அக்குரெல்லே குணவன்ச தேரர், பிரதிப் பொதுச் செயலாளர் வண, வாந்துவே தம்மாவங்ச தேரர், பிரதி நீதிச் செயலாளர் வண, ஹால்பன்வில பாலித தேரர், கொழும்பு பிராந்திய சங்க சபையின் தலைவர் வண, சூரியவெவ ஹேமாநந்த  தேரர் உட்பட மகாசங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மகாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து  ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு தமது ஆசிகளைத் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஜனாதிபதி, மகா சங்கத்தினருடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன் நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து மகா சங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பிரிவெனாக் கல்வி தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள், புனித பூமி சார்ந்த காணிப் பிரச்சினைகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பி.க்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் ஜனாதிபதி, மகாநாயக்க தேரருக்கு அறிவித்தார்.

Read more