Gen Z தலைமுறையினரை சமூகத்தில் ஒருங்கிணைத்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்குவோம்

• உலகின் ஏனைய நாடுகளைப் போன்று இளைஞர்களும் தாங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

• பொய்யான  கோசங்களை முழங்கும் அரசியலால், உலகில் வளர்ந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த நாடு பின்தங்கியது.

• நாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க எனக்கு அடுத்த 05 வருட காலம் அவசியம்.

• வலுவான அரசை உருவாக்க இளைஞர்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது- #AskRanil இளைஞர் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

Gen Z தலைமுறையினரை சமூகத்திற்குள் கொண்டு வந்து நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்கக்கூடிய ஒரு குழுவாக அவர்களை உருவாக்குவதே தனது நோக்கமாகும் என்றும், அப்போது இலங்கை இளைஞர்கள் தாங்கள் விரும்பும் சமூகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

உலகின் ஏனைய நாடுகளைப் போன்று நாட்டின் எதிர்காலத்தை உருவாக்க இளைஞர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான வழியை தாம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

உலகில் வளர்ந்த நாடுகளை விட முன்னணியில் இருந்த எமது நாடு பொய்யான கோசங்களை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட சம்பிரதாய அரசியலால் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த இரண்டு வருடங்களில் ஏற்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடராவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிதி ரணில் விக்ரமசிங்க, நாட்டினதும் இளைஞர்களினதும் எதிர்காலத்தை தீர்மானிக்க அடுத்த 05 வருடங்கள் அவசியம் எனவும் தெரிவித்தார்.  

கொழும்பு காலிமுகத்திடல் ஹோட்டலில்  நேற்று (09) மாலை நடைபெற்ற #AskRanil இளைஞர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி, 2025ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை எனவும் அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இளையோருக்கு ஜனாதிபதியிடம் நேரடியாகவும்   சூம் தொழில் நுட்பத்தின் ஊடாகவும் கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டதோடு தமிழிலும் அவரிடம் கேள்வி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

ஜனாதிபதியிடம் எழுப்பப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் பின்வருமாறு:

கேள்வி: உங்கள் தேர்தல் விஞ்ஞாபனம் தேரவாதப் பொருளாதாரத்தைக் குறிப்பிடுகிறது.  தேரவாத பொருளாதாரம் என்றால் என்ன?

பதில்: இது தேர்தல் விஞ்ஞாபனமல்ல. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படக்கூடிய ஒரு திட்டமாகும். மற்றவர்களுக்கு கொள்கைகள் உள்ள போதும் என்ன செய்யப் போகிறார்கள் என்று செய்வது என்று இல்லை.

வணிகப் பொருளாதாரத்தைத் தான்  தேரவாதப் பொருளாதாரம் என அழைக்கிறோம். புத்தபெருமானின் கோட்பாடு ஒரு வெளிப்படையான கோட்பாடு. இது வர்த்தகம் தொடர்பானது. முன்னர்  ​​வர்த்தக நிறுவனங்களுக்கு எந்தக் கோட்பாடும் இருக்கவில்லை. அவர்கள் பழைய சாதி முறைப்படி வணிகம் செய்தனர். புத்தபெருமானின் உபதேசத்தால் உலகம் முழுவதும் வர்த்தகம் வளர்ந்தது. வர்த்தகத்துடன் தொடர்புடைய இரண்டு மதங்கள் உள்ளன. அதில் ஒன்று பௌத்தம். மற்றொன்று இஸ்லாம்.

தாய்லாந்து திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டது. நம்மை விட முன்னேறியது. இலங்கை பின்னடைந்தது. இப்போது நாம் முன்னேற வேண்டும். உங்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் கிடைக்க வேண்டும். 2019 ஆம் ஆண்டில், நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 89 பில்லியன் டொலர்கள். 2050க்குள் அதை 350 முதல் 400 பில்லியன் டொலர்களாக மாற்ற முயற்சிக்கிறேன்.  

கேள்வி: மலையக பகுதிகளில் சுற்றுலா, விவசாயம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுத் திட்டத்துக்குள் இளையோரை எவ்வாறு உள்ளீர்க்கலாம் என்று நினைக்கிறீரகள்?

பதில்:GEN Z தலைமைமுறையினர் சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும். சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் அவரோடு ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றினோம். இளையோருக்கு எவ்வாறான சமூகம் உங்களுக்கு வேண்டும் என்பதை எனக்கு இளையோரே தீர்மானிக்க வேண்டும்.  இன்றைய சமூகத்தில் எவ்வாறு மக்கள் வாழ முடியும் என்பதை பற்றிய விடயங்களை நாம் திட்டமிடலாம். இலங்கை எந்நாளும் வறிய நாடாக இருக்க முடியாது.  இலங்கை முன்பு ஜப்பானுக்கு நிகராக இருந்த நாடாகும்.  இன்று இலங்கைக்கு பின்பு ஆப்கானிஸ்தான், பூட்டான் உள்ளிட்ட சில நாடுகளே உள்ளன. அந்த நாடுகளும் நம்மை முந்திக்கொண்டு செல்லக்கூடும். நாம் அரசியல் செய்யும்போது உண்மைகளை சொல்ல வேண்டும். எல்லாவற்றுக்கும் கடன் வாங்கி கடன்களையும் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறோம். புதிய சமூகத்தை நாம் உருவாக்கிய பின்னர் அதனை கொண்டு செல்வது உங்கள் பொறுப்பாகும்.

கேள்வி:அரச அதிகாரிகளின் சம்பள  அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் கண்காணிப்பு அமைப்பொன்று கூறியிருக்கிறது.அதில் உண்மை இருக்கிறதா?

பதில்: சம்பள உயர்வை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. சம்பள அதிகரிப்பு கோரி கடந்த காலங்களில் வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படியே சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் அறிக்கையின் பிரகாரமே சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். 2022ஆம் ஆண்டு நாட்டில் நிதி இருக்கவில்லை. மொத்த தேசிய உற்பத்தியும் சரிந்தது. 2023 ஆம் ஆண்டில் மொத்த தேசிய உற்பத்தி 08 பில்லியன்களால் அதிகரித்தது. அதனாலேயே அஸ்வெசும வழங்க முடிந்தது. இவ்வருடத்தின் ஆரம்பத்தில் சற்று வளர்ச்சி கிட்டியதால் 10 ஆயிரம் வரையில் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கினோம். அரச ஊழியர்களுக்கு சலுகை வழங்க வேண்டியது அவசியம். 2022 இல் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்தது. அப்போது சம்பள அதிகரிப்பை வழங்க முடியாமல் போனது.  அதனால் ரூபாவை பலப்படுத்தி சலுகைகளை வழங்குவோம்.  இப்போதும் கஷ்டமான இடத்திலேயே இருக்கிறோம். 2027 இல் தான் இதனை மேற்கொள்ளுமாறு  ஐஎம்எப் வலியுறுத்தியது. ஆனால் நாம் 2025 இல் செய்யத் தீர்மானித்திருக்கிறோம்.

கேள்வி:ஹம்பாந்தோட்டையில் நான்காயிரம் ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயமொன்று அவசியமா?

பதில்: இலங்கைக்கு வௌிநாட்டு முதலீடுகள் அவசியம். அவற்றை கொண்டு வருவதற்கு முதலீட்டு வலயங்கள் பாரிய அளவில் அமைக்கப்பட வேண்டும். நாடளாவிய ரீதியில் அவற்றை அமைப்போம். விருப்பமான இடத்தில் முதலீடு செய்யலாம். ஹம்பாந்தோட்டையில் துறைமுகமும் விமான நிலையமும் இருப்பதால் அங்கு முதலீட்டு வலயத்தை அமைக்கத்  தீர்மானித்தோம். அத்தோடு மொனராகலை பகுதியையும் இணைத்தால் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் முதலீட்டு வலயம் அமையும். ஹம்பாந்தோட்டையில் உட்கட்டமைப்பு வசதிகள் சிறந்த வகையில் காணப்டுவதால் இங்கு முதலீட்டு வலயங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கிறோம்.

சீனா போன்ற நாடுகளில் 20 ஆயிரம் ஏக்கர்களிலேயே இவ்வாறான வலயங்கள் அமைக்கின்றன. எனவே நான்காயிரம் ஏக்கர் என்பது மிகக் குறைந்த அளவாகும் என்றே நினைக்கிறோம்.  ஹம்பாந்தோட்டையிலும் திருகோணமலையிலும் தனித்தனியாக இரு திட்டங்கள் உள்ளன. இந்தத் திட்டங்களை ஜப்பானிய சுபானா ஜுரோங் நிறுவனம் தயாரித்துள்ளது.

கேள்வி: GEN Z  தலைமுறைக்கு எதற்காக உங்கள் தலைமைத்தும் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: நான் நாட்டை ஏற்றுக்கொண்ட பின்பு பொருளாதார நிலைத்தன்மை உருவாகியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் நிலைத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தவும், அதற்காக வௌிநாட்டு வருமானத்தை ஈட்டவும் வேண்டியுள்ளது. வௌிநாட்டு வருமானம் தற்போதும் போதுமாக இல்லை.  நாம் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு சென்று அதனை செய்யத் தவறினால் ஆர்ஜன்டீனா போல நெருக்கடிக்குள் விழுவோம். மற்றைய கட்சிகள் போன்று வரியைக் குறைப்போம் என்று சொல்வதையே நானும் விரும்புகிறேன். ஆனால் அதற்கு போதுமானதாக எமது வருமானம் எமக்கு இல்லை. மொத்த தேசிய உற்பத்தியில் 5 சதவீதத்திற்கு அதிகமாக கடன் பெறமாட்டோம் என்ற இணக்கப்பாட்டையும் ஐஎம்எப் உடன் எட்டியிருக்கிறோம்.  பணத்தை அச்சிடவும் முடியாது. நாம் செலவுகளை அதிகப்படுத்தினால். 2025 வரவு செலவு திட்டத்திற்காக எமக்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளுக்கு இணங்கவே நாம் செயற்படுகிறோம்.  இதனை கருத்தில் கொண்டு வரவு செலவு திட்ட இடைவௌியையும் குறைத்திருக்கிறோம்.

ஜேவிபியின்  யோசனையை பார்த்தால் செலவுகள் பெருமளவில் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் அதனை நிவர்த்திக்க போதுமான வருமான வழிகளை அவர்கள் கூறவில்லை. எனவே போலி வாக்குறுதிகள் வழங்கி மீண்டும் சரிவை ஏற்படுத்தக் கூடாது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளுடன் செல்லத் தவறினால் நிதி கிடைக்காமல் எமது பொருளாதாரம் சரியும். எனவே இவ்வாறான மோசமான அரசியலுக்காக இளையோரின் எதிர்காலத்தைக் காட்டிக்கொடுக்க முடியுமா? இந்த முறைமை கஷ்டமாக இருந்தாலும் முன்னோக்கிச் சென்றால் நல்லதொரு விடிவு கிட்டும்.

கேள்வி:பொருளாதார மேம்பாட்டில் வவுனியா மாவட்டத்தின் மீதான கண்ணோட்டம் எவ்வாறு அமைந்திருக்கிறது?

பதில்:வரிச்சுமையைக் குறைக்க வேண்டும். ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அஸ்வெசும - உறுமய திட்டங்களைப் பாதுகாக்க வேண்டும். இவற்றை அடிப்படையாக கொண்டு உரிய திட்டங்களுடன் செல்வோம்.  சுற்றுலாத்துறையின் தற்போதைய வளர்ச்சியை இரட்டிப்பாக்க வேண்டும். 2050களில் உலகின் உணவுத் தேவை பெருமளவில் அதிகரிக்கும். அதனை இலக்கு வைத்து உணவு உற்பத்தியை மேற்கொள்ள முடியும். சூரிய சக்தி செயன்முறைகளைப் பலப்படுத்தலாம். மொத்த தேசிய உற்பத்தியை அதிகரித்து வரி செலுத்துவோர் தொகையையும் அதிகரித்தால் வரி சுமையை குறைக்கலாம்.  உறுமய திட்டத்தில் காணி வழங்குவதும் அவ்வாறான இலக்குகளை நோக்கியதாகவே அமைந்துள்ளது.

கேள்வி:அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் பெண்கள் அதிகளவில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா?

பதில்:பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நாம் நிறைவேற்றியிருக்கிறோம். ஜனசபா, பிரதேச சபை, மாகாண சபைகளில் அதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளோம். பாராளுமன்றத்தின் தேர்தல் முறைமை புதுப்பிக்கப்படும் வேளையில் அதுகுறித்து அவதானம் செலுத்த முடியும். தற்போதும் அதுகுறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்படுகிறது. பாராளுமன்ற கட்சிகளிடம் பெண்களுக்கான குறித்ததொரு சதவீதத்தை ஒதுக்குங்கள் என்று வலியுறுத்த முடியும்.

கேள்வி: உங்களுக்கு மிகப் பிடித்தமான குடிபான வகை எது?

பதில்: அதிகாரம்

கேள்வி: அனுரகுமார திசாநாயக்க உங்களுடன் கலந்துரையாடலுக்கு தயார் என்கிறார் அதற்கு நீங்கள் தயாரா?

பதில்: நல்லது. நான் இரண்டு கேள்விகளை முன்வைத்துள்ளேன். அதற்கு அவர் மேடையிலேயே பதிலளிக்கலாம். அவர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ரத்துச் செய்துவிட்டு ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி பேசுகிறார். சுனில் ஹந்துநெத்தி போன்றவர்கள் அதற்கு முரணாகச் செயற்படுகிறார்கள். அது குறித்து அவர் மக்களுக்கு தௌிவுபடுத்த வேண்டும்.

கேள்வி: அனுர, தேவதைக் கதை சொல்பவர் , சஜித் வேடிக்கை பேசுபவர்.நீங்கள் சூட்சுமக்காரர்  என்று சொல்கின்றனர். அதைப் பற்றிய உங்களுடைய நிலைப்பாடு யாது?

பதில்: நான் சூட்சுமக் காரனா இல்லையா என்று தெரியாது.ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் கற்றுக்கொண்டேன். என்னைப் பார்த்து இளையோர் கற்பார்கள். வாழ்க்கை என்பதே ஒரு பாடமாகும். அதை கற்க வேண்டும். மனிதனை உருவாக்குவதும் அழிப்பதும் அறிவு தான். அதனைப் பயன்படுத்தி கஷ்டத்திலிருந்து எப்படி தப்பலாம் என்று சிந்திக்க வேண்டும். அடுத்து வரும் ஐந்து வருடங்களில் உங்களுக்கான எதிர்காலத்தை எப்படி இருக்க வேண்டும் என்பதை இளையோர் தீர்மானிக்க வேண்டும். ஜப்பானுக்கு நிகராக இருந்த இலங்கை, ஆப்கானிஸ்தானின் நிலைக்கு விழுந்துவிட வேண்டும் என்பதை நான் விரும்பவில்லை. வாய்ப் பேச்சினால் மட்டும் அரசியல் செய்ய முடியாது. சரியான முறையில் செய்ய வேண்டும். சூட்சுமம் இன்றி அரசியல் செய்ய முடியாது.

கேள்வி: இளைஞர் சமுதாயத்திற்கு 100,000 வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று உங்கள் கொள்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கலைப் பிரிவு படித்த வேலையற்ற பட்டதாரிகளும் ஏராளமாக உள்ளனர். உங்கள் கொள்கை அறிக்கையில் அந்தக் குழுவிற்கு தீர்வு கொடுத்துள்ளீர்களா?

பதில்: நாம் விவசாய நவீனமயமாக்கல், தொழிற்சாலைகளை உருவாக்கல், சுற்றுலாவை மேம்படுத்தல், போன்ற விடயங்களை வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காகவே ஆரம்பிக்கிறோம். முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்கியுள்ளோம். மேலும், தற்போதுள்ள வர்த்தகங்கள் வளர்ச்சியடைய வாய்ப்பளிக்க வேண்டும். 04 ஆண்டுகளாக இளைஞர்களுக்கு தொழில் கிடைக்கவில்லை. மேலும், புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் வரை இதற்கு சில நிவாரணம் வழங்க வேண்டும்.

எனவே, அரச வேலைவாய்ப்புகள், தனியார் துறை தொழில்கள்  மற்றும் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் எதிர்பார்க்கின்றோம்.  தனியார் துறை தொழில்களுக்கு ஒரு வருட சம்பளம் வழங்கவோம். சுயதொழில் செய்வதற்கு இலகுவான முறையில் கடனுதவி வழங்கப்படுவதோடு ஓராண்டு கால கொடுப்பனவுகளும் வழங்கப்பட வேண்டும். தற்போது, ​​கலைப் பிரிவின் கீழ் பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில மொழி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாடங்கள் உட்படதொழிலுக்குச் செல்வதற்குத் தேவையான தகுதிகளை வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அப்போது வேலையில்லா கலைப் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறையும். எனவே, வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்க இந்த 100,000 வேலை வாய்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்

கேள்வி: இளைஞர்களுக்கான தொழில்நுட்பத்துடன் விவசாயத்தில் இணைவதற்கான வேலைத்திட்டம் உங்கள் திட்டத்தில் உள்ளதா?

பதில்:ஆம். விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், ஏற்கனவே உள்ள கமநல சேவை நிலையங்கள்,  விவசாய நவீனமயமாக்கல் மையங்களாக மாற்றப்படும். அரச மற்றும் தனியார் துறையுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்க்கிறோம். தமது விளைச்சலை விற்பனை செய்ய தனியார் நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும். குளிர்பதனக் கிடங்கு வசதிகளும் தேவை. இவை அனைத்தும் தனியார் நிறுவனங்களுடன் கலந்துரையாடி செயல்படுத்தப்பட எதிர்பார்க்கப்படுகிறது. நெல் விவசாயத்தைப் பொறுத்த வரையில் ஒரு ஹெக்டேருக்கு 08 மெட்ரிக் தொன் விளைச்சல் பெற வேண்டும். அந்த இலக்கை அடையும் போது நாட்டுக்குத் தேவையான மொத்த அரிசியையும் உலர் வலயத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். ஈர வலயத்தை மற்ற பயிர்களின் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தலாம்.

கேள்வி - தற்போது பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தாலும், வாழ்க்கைச் செலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகம். அந்த நிலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

பதில்: பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் டொலரிற்கு ஏற்ப  ரூபாவிற்கு பெறுமதி 185 ரூபாவிலிருந்து 370 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒருடொலரின் மதிப்பு 400 ரூபாவாக உயரும் அபாயம் எங்களுக்கு இருந்தது. அதனால் ரூபாவை நிலைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்தேன். இதனால் ஒரு டொலரின் பெறுமதி 300 ரூபாவாக நிலைபெற்றுள்ளது.

ரூபாயை வலுப்படுத்துவதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பதோடு பொருட்களின் விலையையும் குறைக்க முடியும் என எதிர்பா்க்கிறோம்" என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Read more