சஜித் மற்றும் அநுரவின் கொள்கை பிரகடனங்களில் இளைஞர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை!

• இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கும் திறன் கொண்ட குழுவாக புதிய தலைமுறையை உருவாக்குவதே எனது நோக்கமாகும்.

• வீழ்ச்சியடைந்த இளைஞர்களின் நம்பிக்கையை 'இயலும் ஸ்ரீலங்கா' செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படும்.

• அரசியலில் இளைஞர் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க தேவையான பின்னணி உருவாக்கப்படும்.

• புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை அதிகரிக்க இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகம் ஒன்று உருவாக்கப்படும்.

• நான் ஆரம்பித்த தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து கொண்டு 75 வருடங்களாக இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஜே.வி.பி. குற்றஞ்சாட்டியது.

• அரச நிர்வாகத்திற்கு புதிய தலைமுறையின் கருத்துக்களையும் உள்வாங்க கருத்தாடல் - “இயலும் ஸ்ரீலங்கா” தேசிய இளைஞர் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு.

ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் தேர்தல் கொள்கைப் பிரகடனங்களில் இளைஞர்கள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை என்று ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தில் 50இற்கும் குறைவான வார்த்தைகளே இளைஞர்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் இன்றைய இளைஞர்களின் பொறுப்பில் உள்ளது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய தலைமுறைக்கு நவீன தொழில்நுட்ப உலகில் முன்னோக்கிச் செல்வதற்கு தேவையான டிஜிட்டல் அறிவையும் அனுபவத்தையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல் விநியோகம், டிஜிட்டல் வணிக செயற்பாடுகள் என்பன தொடர்பில் பயிற்சி வழங்கி வருமான வழிகளை திறந்து விடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  

மஹரகம இளைஞர் சேவை மன்றத்தில் இன்று (30) முற்பகல் நடைபெற்ற "இயலும் ஸ்ரீலங்கா" தேசிய இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், புதிய தலைமுறையிடையே (Gen Z Dialogue) கருத்தாடலை  உருவாக்குவதன் மூலம் புதிய தலைமுறையினரின் கருத்துக்கள் அரச நிர்வாகத்தில் உள்வாங்கப்படும் எனவும் அதற்காக தேசிய மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச  மட்டத்தில் இளைஞர் மத்தியநிலையங்களை அமைக்கும் பொறுப்பு தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு வழங்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் நாட்டின் ஒவ்வொரு பிரதேச செயலகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளம் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

அரசியல் களத்தில் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இளைஞர் பாராளுமன்ற ஆலோசனை அலுவலகத்தை நிறுவி புதிய தலைமுறையினரின் அரசியல் அறிவை மேம்படுத்துவதற்கு பாடுபடுவதாகவும் குறிப்பிட்டார்.

Gen Z தலைமுறையை இந்த நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக்கூடிய குழுவாக உருவாக்க தாம் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, 2015 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் வீழ்ச்சியடைந்த  இளைஞர்களின் நம்பிக்கைகள் மீண்டும் "இயலும் ஶ்ரீலங்கா" திட்டத்தின் ஊடாக நிறைவேற்றுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

''நாட்டை எதிர்காலத்தில் இளைஞர்களே பொறுப்பேற்கவுள்ளனர். Gen Z தலைமுறையினர் இலங்கை அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கருத்து காணப்படுகிறது.

75 வருடங்களாக இந்த நாட்டில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இளைஞர் சேவை மன்றத்தில் இருந்து தான் அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை தெரிவித்தார்கள். இந்த இளைஞர் சேவை மன்றம் 1948 இல் இருக்கவில்லை. இளைஞர் கழகங்களை உருவாக்கி இளைஞர் சேவை மன்றத்தை உருவாக்கியது நான்தான். எனவே, நாடு முன்னேற்றப்படவில்லை என்று கூறுவது ஏற்கக் கூடிய பதில் அல்ல.

ஆனால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையவில்லை. நாட்டின் பொருளாதாரத்தை எப்படி பலப்படுத்துவது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 2020 தேர்தலில் நாம் மொட்டுக் கட்சிக்கு  இளைஞர்கள் வாக்களித்தனர். ஆனால் இளைஞர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை. 2015 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்திற்கு வாக்களித்தோம். ஆனால் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை என மற்றுமொரு தரப்பு கூறுகின்றது. அதனால்தான் எங்களுக்கு அரசியல் வேண்டாம் என இளைஞர்கள் கூறுகின்றனர்.

அந்த சந்தர்ப்பங்களில் தாம் ஆட்சியில் இருக்கவில்லை என எனது ஜே.வி.பி.  நண்பரான முன்னாள் அமைச்சர் அனுரகுமார திஸாநாயக்க கூறுகிறார். சஜித் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ  ஆகியோரும்  நானும் முன்னாள் அமைச்சர்கள் என்பதை நினைவு கூருகின்றேன்.

2020  பாராளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருப்பதாகவும், 03 பில்லியன் அமெரிக்க டொலர்களை தேடிக்கொள்ளாவிட்டால் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்றும் குறிப்பிட்டேன். இதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி  தோல்வியடைந்தது.  உண்மையைச் சொன்னதால் யாரும் எனக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் நான் அரசியலை விட்டு விலகவில்லை. நாட்டை மீட்க வேண்டும் என்பதால் நாட்டைப் பொறுப்பேற்றேன். உங்களுக்கு எதிர்காலத்தை வழங்குவதற்காகவே நாட்டைப் பொறுப்பேற்றேன். எனவே நாம் அனைவரும் இணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பாதையை மாற்றினால் பாதிப்பு தான் ஏற்படும். உங்கள் எதிர்காலமே இதன் ஊடாக தீர்மானிக்கப்படும்.

2048 பற்றி யோசிப்பதில் அர்த்தமில்லை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால்  தாய்லாந்தும் வியட்நாமும் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து செயற்பட்டதாலே அவை  வர்த்தகப் பொருளாதாரமாக மாறின.

ஏற்றுமதி பொருளாதாரமாக மாறுவோமா அல்லது இந்த நிலையில் இருந்து கடன் வாங்கி இன்னும் 15 ஆண்டுகளில் வீழ்ச்சி அடையப் போகிறோமா என்பதை முடிவு செய்ய வேண்டும். இன்னும் 15 வருடங்களில் எரிவாயு, மின்சாரம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால்தான் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதற்காக பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தோம். அதனை அமுல்படுத்தவே இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆணையை கோருகிறேன்.

மேலும், புதிய தலைமுறையினருடன் ஒரு கருத்தாடலை (Gen Z Dialogue) ஏற்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு எம்மிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும். இது தேசிய, மாகாண, மாவட்ட, மற்றும் பிரதேச மட்டங்களிலும் செய்யப்பட வேண்டும். அதற்காக இளைஞர் மையங்கள் ஸ்தாபிக்கப்படும். அந்தக் கருத்தாடலை  ஏற்பாடு செய்யும் பொறுப்பு, இளைஞர் சேவைகள் மன்றத்திடம் ஒப்படைக்கப்படும்.

மேலும், இளைஞர்கள் மீண்டும் அரசியல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.

மேலும், இளைஞர் வசந்தத்திற்கு மேலதிகமாக ஏனைய துறைகளில் உள்ள இளைஞர்கள் பற்றியும் எமது கொள்கைப் பிகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 04 வருடங்களாக தொழில் வாய்ப்புகளை வழங்க முடியவில்லை. எனவே, அடுத்த ஆண்டு இளைஞர்களுக்கு ஒரு இலட்சம் புதிய வருமான மூலங்களை உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம். விவசாயத் துறையில் நிரந்தரமாக சுயதொழில் செய்பவர்களுக்கு உதவி வழங்க சிறப்புப் பிரிவு ஸ்தாபிக்கப்படும்.

மேலும், தற்போது தொழில் பயிற்சி பெறும் நபர்களுக்கு மேலதிகமாக மேலும் 50,000 இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பும் நிறுவனத்தில் தொழில் பயிற்சி பெற நிதி வழங்கப்படும். எனவே 150,000 பேருக்கு  2025 இல் தொழில் வாய்ப்புகளை வழங்குவோம். இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, தொழிலுக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கும் ஆதரவை வழங்குவோம். பொருளாதார வளர்ச்சியுறும்போது புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.

முன்னாள் அமைச்சர்  அனுரகுமார திஸாநாயக்கவின் விஞ்ஞாபனத்தையும் படித்தேன். அதில் தொழில் வாய்ப்புகள் குறித்து சரியாக குறிப்பிடப்படவில்லை. இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்பு உருவாக்குவது, தொழில் வாய்ப்பற்ற இளைஞர்கள் தகவல் அறிய வங்கி உருவாக்கப்படுதல், அரச தொழிலுக்கான போட்டிப் பரீட்சை முறையை அறிமுகம் செய்தல், உயர் தரம் சித்தி பெற்றவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கு, எப்படி பயிற்சி அளிக்கப்படும் என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் தொழில் வழங்குவது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதுதான் வித்தியாசம்.

இளைஞர்களுக்கு கடன் வழங்க அபிவிருத்தி வங்கியொன்று நிறுவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிளைகளில் இளைஞர்கள் சந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர் சேவைகள் மன்றத்திற்கு கிளைகள் இல்லை. அவை இளைஞர் சங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தெரியாமல் கொள்கைகளை எழுதினால் இப்படித்தான் இருக்கும்.

அத்துடன், முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் கொள்கைப் பிரகடனத்தையும் வாசித்தேன். அதில் இளைஞர்களைப் பற்றி 49 வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இளைஞர்களைப் பற்றி 50 வார்த்தைகள் கூட அவர்கள் எழுதவில்லை. இந்த நபர்களிடம் எதிர்காலத்தை நீங்கள் ஒப்படைத்தால், இங்குள்ள Gen Z தலைமுறை அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானிக்க வேண்டும்.'' என்றார்.

இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்,  பணிப்பாளர் நாயகம் பசிந்து குணரத்ன,

'இந்நாட்டைக் கட்டியெழுப்ப 'இயலும்' என்று நம்பும் இளைஞர்கள் இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், வரிசையில் நின்று சோர்வடைந்த, எதிர்கால நம்பிக்கைகளை இழந்த நாடு இது. அன்று  சிம்பாப்வே, லெபனான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடப்பட்டது. அன்று இந்த நாட்டின் வங்கிக் கட்டமைப்பு, அரச சேவை , பாதுகாப்புப் படைகள் வீழ்ச்சி கண்டிருந்தால், இன்று நாம் இங்கு இருந்திருக்க மாட்டோம். இந்த நாட்டை விட்டுச் செல்வதை கனவிலும் நினைக்காத எமது நண்பர்கள் அன்று இந்த நாட்டை விட்டு வெளியேறினர்.

அன்று இளைஞர்கள் குழுவொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சென்று உரையாடியது. இந்த நாடு வங்குரோத்தாகிவிடும் என்று அன்றே கூறினார். அவர் கூறியபடியே நடந்தது. அப்போது, ​​ஓராண்டில் இந்த நிலையில் இருந்து மீண்டு வரலாம் என்றார். அன்று அவர் கூறியது போல்  நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீட்க முடிந்தது. செப்டெம்பர் 21ஆம் திகதி இந்த நாட்டை இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலைக்கு கொண்டு செல்வதா இல்லையா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அளவுக்கு இளைஞர்களுக்காக உழைத்த தலைவர் ஒருவரும் இந்த நாட்டில் இல்லை. இந்நாட்டு இளைஞர் சமூகத்தின் மேம்பாட்டுக்காக 04 தசாப்தங்களுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தை விட அவருக்கு இந்த நாட்டின் இளைஞர் சமூகத்தினரிடம் உரையாற்றுவதற்கு சிறந்த இடம் எதுவுமில்லை. ஜனாதிபதி அவர்களே, எமது நாட்டை பின்னோக்கி கொண்டு செல்ல நாம் தயாரில்லை, என்று இந்நாட்டின் இளைஞர்களாக இந்த இடத்தில் இருந்து இன்று நாம்  தெரிவிக்கிறோம்.'' என்றார்.

இளைஞர் செயற்பாட்டாளர்  நிராஷான் விதானகே,

ஜனாதிபதி அவர்களே, இங்குள்ள ஒவ்வொரு இளைஞர்களும் வெவ்வேறு கனவுகளைக் கொண்டுள்ளனர். அந்த கனவுகளை நனவாக்கும் 'இயலும்' என்னும் நாடு நமக்கு வேண்டும் என்ற கனவு நமக்கு இருக்கிறது. இலங்கை அரசியலில் அந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய 'உண்மையான செயல் வீரன்' ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என இந்நாட்டு இளைஞர்கள் நம்புகின்றனர்.

இந்த இளைஞர்கள் வரிசைகளில் நிற்கும்போது, ​​தந்தைமார் வரிசைகளில் தனது இறுதி மூச்சை விடும்போது, ​​அவர்களின் கல்வி தடைப்பட்டு, நம்பிக்கையற்ற நிலையில் இருக்கும் போது, ​​தாய்மார் எரிவாயு வரிசையில் பகல் பொழுதைக் கழிக்கும்போது, ​​மக்கள் ஆதரவற்ற நிலையில் இந்த சொல்லொனா துன்பங்களுக்கு ஆளாகியபோது நர்டடைப் பொறுப்பேற்க முன்வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவே நாட்டைப் பொறுப்பேற்று எமது வாழ்வில் நிம்மதியையும், நம்பிக்கையையும் கொண்டுவந்தார்.  பரீட்சித்துப் பார்ப்பதற்காக அநுரவிடமும், சஜித்திடமும் இந்த நாட்டை ஒப்படைக்க இந்நாட்டின் இளைஞர் சமூகம் தயாராக இல்லை.

இந்த நாட்டை கட்டியெழுப்பக்கூடிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தேவையான பலத்தை கொடுப்பது இளைஞர்களின் பொறுப்பாகும். நீங்கள் கற்பனைக் கதைகளால் ஏமாறுகிறீர்களா? சிறு பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து, அடுத்த பாதாளத்திற்கு நாட்டைக் கொண்டு செல்வீர்களா? என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

தவறான அரசியல் முடிவின் மூலம் தாய்நாட்டின் அழிவுக்கு பங்கம் விளைவித்து இன்று பிறக்கும் குழந்தைகளால் சபிக்கப்படும் முடிவை இளைஞர்களாகிய நாம் எடுக்க வேண்டுமா என்பதை மனசாட்சியுடன் ஆராயுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றார்

இங்கு கூடியிருந்த இளைஞர்களுக்கு ஜனாதிபதியிடம் நேரடியாக  கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

இளைஞர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பதில்களும் பின்வருமாறு:

கேள்வி:

ஜனாதிபதி அவர்களே, உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'தேரவாத வர்த்தகப் பொருளாதாரம்' என்றால் என்ன?

பதில்:

கடந்த காலங்களில் இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த வலயத்தில் நமது நாடு வர்த்தக நாடாக இருந்தது. சீனா உள்ளிட்ட பிராந்தியத்தில் இருந்து பொருட்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு பரிமாறப்பட்டது. ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை தொடர்பில் அந்த செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

எங்கள் இந்தக் கட்டமைப்பு வீழ்ச்சியடைந்தபோது, ​​அந்த வளர்ச்சி தாய்லாந்தில்  ஏற்பட்டது. பின்னர் 18 ஆம் நூற்றாண்டில் அந்த ராஜ்ஜியங்கள் வீழ்ச்சியடைந்தன.  தாய்லாந்து பழைய வழியில் ஏற்றுமதி பொருளாதாரத்துடன் முன்னெடுத்தாலும் நாம் அந்த முறையை பின்பற்றவில்லை.

மேலும் தாய்லாந்து முறையை வியட்நாமும் பின்பற்றியது. தாய்லாந்தும் இலங்கையும் தேரவாத நாடுகளாக முக்கிய வர்த்தகப் பொருளாதாரங்களாக இருந்தன. 1990 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 08 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. வியட்நாமில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

நம் நாட்டில் கடந்த காலத்தில் தேரவாத பொருளாதாரம் இருந்தது. அந்தத் தேரவாதப் பொருளாதாரத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம்.

கேள்வி:

ஜனாதிபதி அவர்களே, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து உங்கள் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் இளைஞர்களுக்கு எவ்வாறான வசதிககள் வழங்கப்படும்?

பதில்:

அவர்களுக்கு நிதி வசதியைப் வழங்குவது குறித்து வங்கிகளுடன் ஆலோசித்து வருகிறோம். மேலும், இப்பணிகளை ஏற்றுக்கொள்ளப்பட்ட பணியாக மாற்றி, இந்த நிதி வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். புதிய சட்டங்களைக் கொண்டு வந்த பிறகு, அவற்றை பற்றி ஆராய்ந்து முடிவு எடுக்கிறோம். சில நாடுகள் இதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போது புதிய பொறுப்புகளை ஏற்க வங்கிகள் தயாராக இல்லை. ஆனால் தற்போது அந்த பொறுப்புகளை ஒப்படைப்பது குறித்து வங்கிகளுடன் ஆலோசித்து வருகிறோம்.

கேள்வி:

மாகாண இளைஞர் மத்திய நிலையம் அமைக்கப்படும் என உங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி தெளிவுபடுத்த முடியுமா?

பதில்:

மாவட்டங்களில் உள்ள இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைத்து, மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மாகாண மட்டத்தில் ஒரு மையத்தை உருவாக்க நாங்கள் எதிர்பார்க்றோம். முதலில் தமது மாவட்டங்களிலும் வலயங்களிலும் இளைஞர் கழகங்கள் மற்றும் மாணவர் தலைவர்களின் குழுக்களை வரவழைத்து வலய மையங்களை உருவாக்கி பின்னர் மாவட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதன் பிறகு, மாகாண மையம் ஒன்றை நிறுவி, மாகாண மையங்கள் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் இளைஞர் சேவை மன்றத்துடன் இணைந்து செயல்பட முடியும். பின்னர் இப்பிரதேசங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட மாகாண சபைகள், உள்ளுராட்சி, நகர சபைகளின் ஊடாக வழங்கப்படும்.

கேள்வி :

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், நீங்கள் எவ்வாறான  நாட்டை உருவாக்கப் போகிறீர்கள்?

பதில்:

மக்கள்  வாழக்கூடிய மற்றும் இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்கும் நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். வலுவான பொருளாதாரம் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏற்றுமதிப் பொருளாதாரம், டிஜிட்டல் பொருளாதாரம், பசுமைப் பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்கி போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும். இது தொடர்பில், ' இயலும் ஸ்ரீலங்கா' தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதனை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

இங்கு  ‘Gen Z’  தலைமுறையினரே உள்ளனர். இங்குள்ள அனைவரும் ஸ்மார்ட்போன் யுகத்தில் வாழ்கிறார்கள். கைபேசி இல்லாமல் இந்த தலைமுறை வாழ முடியாது என்று சிலர் கூறுகிறார்கள். பெரும்பாலும் வீட்டில் டெலிபோன் இல்லாத காலகட்டத்தில்தான் எங்கள் தலைமுறை பிறந்தது. அந்த சமூகத்தில் உள்ள உறவுகள் நேரடியானவை. உங்கள் தலைமுறை மொபைல் போன் மற்றும் கணினி மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. ‘Gen Z’  தலைமுறை சமூகத்திற்கு வெளியே தனியாக இருக்குமா? அல்லது சமூகத்தின் ஒரு பகுதியாக மாறுமா?

பதில்:(இளைஞர் ஒருவரின் பதில்:)

‘Gen Z’  தலைமுறை இந்த நாட்டில் இருக்க வேண்டிய தலைமுறை. 1992 இல் பிறந்தவன் என்ற முறையில் நான் மூன்று தலைமுறைகளையும் பார்க்கிறேன். கைபேசியைப் பயன்படுத்தி மென்பொருளின் மூலம் நமது திறன்களை வளர்த்துக்கொண்டு, அதன் மூலம் பணம் சம்பாதிப்பதற்காக தலைமுறை பழக்கமாகிவிட்டது.  நாமும் இந்த சமுதாயத்தில் ஒரு குழு தான்.

(மற்றொரு இளைஞரின்பதில்)

இளைஞர்கள் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்து ஆட்சியாளர்களைக் கூட வீட்டுக்கு அனுப்பினார்கள். எமது இளைஞர்கள் அரசியலுக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் வரப் பயப்படுகிறார்கள். இளைஞன் ஒருவன் அரசியல் பேசினால் படிக்கும் வேலையைப் பார் என்று ஒதுக்கும் நிலை காணப்படுகிறது. எப்படியாவது அரசியலுக்கு வந்தாலும் உனக்கு என்ன அனுபவம் இருக்கிறது என கேட்கின்றனர். அரசியல் என்றாலும் கல்விஎன்றாலும் அதில் உள்நுழையும் போது தான் அனுவபம் என்கிற ஒன்று கிடைக்கும்.  கடந்த காலத்தில் அதிகாரத்தை ஏற்குமாறு கோரப்பட்ட போது சில தலைவர்கள் புறமுதுகு காட்டி ஓடிய போது தாங்கள் பொறுப்பை ஏற்றமைக்கு உங்களுக்கு நன்றி  தெரிவிக்கிறேன்.  தற்கால இளைஞர்கள் முன்னைய இளைஞர்களை விட மென்மேலும் வளர்ந்து வருகிறார்கள். வயதானவர்களே அரசியலில் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த நிலை தொடரக் கூடாது.

கேள்வி:  

இந்தியாவுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இந்தத் திட்டத்தினால் யாழ் இளைஞர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?

பதில்:

மின்உற்பத்தி  மையமாக மாறும்போது, ​​அந்தப் பகுதிக்களில் புதிய தொழில்கள், கைத்தொழில்கள் உருவாகும்.  மேலும் இந்தியாவில் இருந்து பணம் வருகிறது. சுற்றியுள்ள பகுதிகள் முன்னேற்றமடையும்." என்று ஜனாதிபதி பதிலளித்தார்.

Read more